வழக்கில் ஜெ. தலையீடு: விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற ஜெயேந்திரர் கோரிக்கை
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில் முதல்வர் ஜெயலலிதாவின் தலையீடு இருப்பதால் இந்த வழக்கை வேறுமாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை நகல்வழங்கப்பட்டது.
நகல் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சார்பில் ஒரு மனு தாக்கலானது.
அதில், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு இந்த வழக்கில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. வழக்கை விசாரிக்கும்அதிகாரியைக் கூட முதல்வரே பார்த்து தேர்வு செய்துள்ளார்.
இதனால் இந்த வழக்கு விசாரணை தமிழகத்தில் நடந்தால் எனக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காது என்றே கருதுகிறேன்.
இந்த வழக்கில் ஜனவரி மாதம் 21ம் தேதி குற்றப்பத்திரிகை நகல் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 3 மாதம் கழிந்த பிறகு எனக்குஇன்று தான் குற்றப் பத்திரிகை நகல் தரப்பட்டுள்ளது.
ஆகவே சங்கரராமன் கொலை வழக்கை தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றினால் தான் எனக்கு நியாயம் கிடைக்கும்.எனவே வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஜெயேந்திரர் அந்த மனுவில் கோரியுள்ளார்.