பிகார் சட்டசபை கலைப்பு சட்ட விரோதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி:
பிகார் சட்டசபையைக் கலைத்தது சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிகாரில் நடந்த தேர்தலையடுத்து தொங்கு சட்டசபை உருவானது. லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாஜக-ஐக்கிய ஜனதாதளம், பாஸ்வானின் லோக் ஜன்சக்தி ஆகியவை தனித்தனியாக இடங்களைக் கைப்பற்றியதால் யாராலும் ஆட்சியமைக்கமுடியவில்லை.இந் நிலையில் லோக் ஜன்சக்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயன்றது. இதையடுத்து சட்டசபையைக் கலைக்கஆளுநர் பூட்டா சிங் பரிந்துரைத்தார். இதைத் தொடர்ந்து சட்டசபை கலைக்கப்பட்டது.
இப்போது மீண்டும் அங்கு தேர்தல் நடக்கவுள்ளது.
இதற்கிடையே சட்டசபைக் கலைப்பை எதிர்த்து பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த அரசியல்சட்ட பெஞ்ச் இன்று தனது தீர்ப்பை வழங்கியது.
அதில், ஆளுநர் பூட்டா சிங்கின் பரிந்துரையை ஏற்று பிகார் சட்டசபை கலைக்கப்பட்டது அரசியல் சட்டத்துக்கு விரோதமானதுஎன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திட்டமிட்டபடி பிகாரில் மறு தேர்தல் நடத்தலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் பெரும்பான்மை அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்துவிட்டால் அதை நீதிமன்றத்தாலும் தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.