திருடச் சொல்லும் போலீஸ்: சப்பமூக்கு சீனியின் சோகக் கதை
சென்னை:
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது சினிமாப் பாட்டு. ஆனால் திருந்திய திருடனை, ஏன்திருந்தினாய், தொடர்ந்து திருடு என்று போலீஸே கூறினால் எப்படி இருக்கும்?
அப்படிப்பட்ட சிக்கலான நிலையில் தான் சப்ப மூக்கு சீனிவாசன் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தைநோக்கி ஓடோடி வந்து போலீஸார் மீது சரமாரியாகப் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இது இவரது இயற்பெயர், இவரது முகவெட்டைப் பார்த்து மற்றவர்கள் கூப்பிடஆரம்பித்தது தான் சப்பமூக்கு சீனி! 34 வயதாகும் சீனி, தற்போது சென்னை கொரட்டூரில் வசித்து வருகிறார்.
பாடியில் உள்ள டிவிஸ் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வரும் சீனிக்கு வருடத்தில் 6 மாதங்களுக்கு வேலைஇருக்காது. இந்த காலகட்டத்தில், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சின்னச் சின்னத் திருட்டுக்களில் ஈடுபடுவாராம்.
இவரும், நண்பர் செளந்தரராஜனும் ஒரு மோட்டார் சைக்கிளில் கிளம்புவர். பின் இருக்கையில் சீனி உட்கார்ந்து கொள்வார்.சாலையில், தெருவில் தனியாக செல்லும் பெண்களின் கழுத்திலிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மாயமாகி விடுவர்.
இது பெரும் குற்றச் செயல் என்று தெரிந்தும், வேறு வழியில்லாமல் சங்கிலித் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார் சீனி.1997ம் ஆண்டு முதல் இந்தத் தொழிலில் குதித்துள்ளார் சீனி. மொத்தம் இதுவரை 8 பெண்களிடம் சங்கிலி பறித்துள்ள சீனியைபோலீஸார் கைது செய்து 3 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் சிறைவாசம் முடிந்து கடந்த வாரம் தான் வெளியே வந்துள்ளார் சீனி. விடுதலையாகி வந்த அவருக்கு மனமாற்றம்ஏற்பட்டுள்ளது. இனி மேல் திருட்டுத் தொழிலில் ஈடுபடக் கூடாது என்று மஜா விக்ரம் கணக்காக முடிவெடுத்தார். இந்தமுடிவை மஜா மணிவண்ணன் பாணியில் போலீஸாரிடம் போய் கூறியுள்ளார்.
மஜா போலீஸைப் போலவே, இதை நம்ப மறுத்துள்ளது கொரட்டூர் போலீஸும். மேலும், பல்வேறு இடங்களில் நடந்த சங்கிலித்திருட்டு சம்பவங்களை சீனியுடன் தொடர்புப்படுத்தி அவரை மிரட்டியுள்ளது. மேலும், தொடர்ந்து திருட்டுத்தனம் செய்யுமாறும்,மறுத்தால் பல வழக்குகளைப் போட்டு நிரந்தரமாக உள்ளே தள்ளி விடுவோம் எனவும் போலீஸார் மிரட்டியுள்ளனர்.
இதனால் வெறுத்துப் போன சீனி, நேராக தனது குடும்பத்துடன் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்குவெள்ளிக்கிழமை வந்தார். ஆணையர் நடராஜிடம் தனது நிலையை கூறி முறையிட்டுள்ளார். அவரது புகாரை பொறுமையாகக்கேட்ட ஆணையர், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு பூந்தமல்லி உதவி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
இனிமேல் இதுபோல போலீஸார் கொடுமைப்படுத்த மாட்டார்கள் என்று சீனிக்கு ஆணையர் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.