For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோவுக்கு விருந்து கொடுத்தோம்-காளிமுத்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சல்லிக்காசு செலவில்லாமல் இல்லாமல் அரசு விருந்தினர் போல உள்ளே இருந்துவிட்டு வெளியே வந்தார் வைகோ என அவரை பொடா சட்டத்தில் ஜெயலலிதா அரசு சிறையில் அடைத்தது குறித்து புதிய விளக்கம் தந்தார் அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து.

காஞ்சிபுரத்தில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய மாஜி சபா காளிமுத்து,

அரசு ஊழியர்களுக்கு அம்மா சலுகைகளை அள்ளிக் கொடுத்துள்ளார். கருணாநிதிக்கு பொறுக்கவில்லை. பழசெல்லாம் ஞாபகம் வருதே என்கிறார். ஒரு தாய் குழந்தையை கொஞ்சுவார், கடிந்து கொள்ளவும் செய்வார்.

தமிழகத்தின் நிதி நெருக்கடியை ஜெயலலிதா போக்கினார். இதற்கு மத்திய சர்க்கார் உதவவில்லை. சிதம்பரம் நிதி வர விடாமல் தடுக்கிறார். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரி ராஜா விளக்கம் கேட்கிறார். என்ன வெண்டைக்காய் விளக்கம் வேண்டும்.

வேறு மாநிலத்தில் இது போன்று துரோகம் செய்யும் மந்திரிகளை நுழைய விடுவார்களா மக்கள். செருப்பு தோரணம் அல்லவா கட்டுவார்கள், கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் அல்லவா ஏற்றுவார்கள்.

கருணாநிதி ஆட்சியில் இந்தியா அமைதியாக இருந்தது, தமிழகத்தில் குண்டு வெடித்தது. கையாலாகாத முதல்வர் என்று ராணுவம் வந்தது. நெல்லை, சிவகாசியில் சாதிக் கலவரம் நடந்தது. புரட்சித் தலைவி ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. ஜாதிக் கலவரக்காரர்கள் ஒடுக்கப்பட்டார்கள்.

புரட்சித் தலைவி ஒரு புலி. ஆனால், ஜெயலலிதாவுக்கு தேர்தல் பயம் என்கிறார் கருணாநிதி. உண்மையில் கருணாநிதி தான் பயத்தில் உள்ளார். காரணம், அவரது கூட்டணியில் உள்ளோர் கூட்டணியை விட்டு சுவர் ஏறிக் குதிக்க நேரம் பார்த்துக் கொண்டுள்ளனர்.

இரண்டு பூனைகளுக்கு அப்பத்தை குரங்கு பங்கு போட்ட கதை மாதிரி தான் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு முடியப் போகிறது. இரு பூனைகளும் ஏமாறப் போகின்றன. முழு அப்பத்தையும் திங்கப் போவது திமுக தான்.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு வலை விரிக்கிறேன் என்று ஈயம், பித்தாளை, பேரிச்சம் பழக்காரன் போல் என்னை கார்ட்டூன் போட்டுள்ளார்கள் திமுக பத்திரிக்கையில். அப்படியென்றால் அந்தக் கூட்டணியில் இருப்பவை ஈயம், பித்தாளைகளா?

ஸ்டாலினை முதல்வராக்க முயலும் கருணாநிதி, வைகோவையோ, துரைமுருகனையோ, பேராசிரியர் அன்பழகனையோ துணை முதல்வராக்குவோம் என்று அறிவிக்க கருணாநிதி தயாரா?

வைகோவை பொடா சட்டத்தில் சிறையில் போட்டோம் என்கிறார் கருணாநிதி. அந்தச் சட்டம் கொண்டு வந்ததே நீங்கள் இடம் பெற்ற மத்திய சர்க்கார் தான். சிறையில் வைகோவை நன்றாகத்தான் வைத்திருந்தோம்.

எப்படி போனாரோ அப்படியே அச்சுக் குலையாமல் தான் அவர் வெளியில் வந்தார். சிறையில் செளகர்யம் எப்படி இருந்தது என்று கேட்டேன். புட் பால் விளையாடினேன், புத்தங்கள் படித்தேன், நன்றாக சாப்பிட்டேன், உடம்பில் இருந்த நோயெல்லாம் ஓடிவிட்டது என்றார்.

சல்லிக்காசு செலவில்லாமல் இல்லாமல் அரசு விருந்திர் போல் உள்ளே இருந்துவிட்டு வந்துள்ளார் வைகோ. அவரே கோபப்படவில்லை. கருணாநிதிக்கு ஏன் ஆத்திரம் வர வேண்டும்.

ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராவார். கர்ணணாகவும் கும்பகர்ணனாகவும் திமுக பக்கம் இருக்காதீர்கள். அர்ஜூனனாக இருக்க அதிமுகவுக்கு வாருங்கள். லட்சுமணனாக இருக்க (ஜெயலலிதா தான் ராமராம்) அதிமுகவுக்கு வாருங்கள் என்று வைகோவுக்கு அழைப்பு விடுத்தார் காளிமுத்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X