தமிழக கூடுதல் டிஜிபி மரணம்
சென்னை:
தமிழ்நாடு குற்ற வழக்குகள் இயக்குநரக கூடுதல் டிஜிபி ரவி ஆறுமுகம் சென்னையில் மரணமடைந்தார்.
தமிழக காவல் துறையில் பல்வேறு உயர் பதவிகள் வகித்துள்ள ரவி ஆறுமுகம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உடல் நலம்பாதிக்கப்பட்டார். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்க்கிழமை பிற்பகல்மரணமடைந்தார்.
மறைந்த ரவி ஆறுமுகத்திற்கு வயது 58. கடந்த 1972ம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்தார். ஐ.பி.எஸ். அதிகாரியான ரவிஆறுமுகம் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். 1996-97ல் சென்னை மாநகர கூடுதல் ஆணையராக பணியாற்றியுள்ளார்.கடைசியாக தமிழ்நாடு குற்ற வழக்குகள் இயக்குநரக இயக்குநராக பணியாற்றி வந்தார்.
சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தவர் ரவி ஆறுமுகம். மொழியாக்கத்திலும் வல்லமை பெற்றவர். பல்வேறுநூல்களை எழுதியுள்ளார்.
ரவி ஆறுமுகத்தின் தந்தை அய்யம்பெருமாள், தாயார் ஜானகி ஆகியோர் தமிழாசிரியர்கள். இருவரும் ஒரே நாளில்மரணமடைந்தனர். அவரது தம்பி அருண கீதையன் அரசு மன நல மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த 18ம் தேதிதான் மரணமடைந்தார். ரவி ஆறுமுகத்தின் மனைவி ரமாராணி ஏற்கனவே இறந்து விட்டார்.
மறைந்த ரவி ஆறுமுகத்திற்கு இசைநிலா, யாழினி என ஆகிய மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த பெண் இசைநிலாவுக்குசமீபத்தில் தான் திருமணம் நடந்தது. மற்றொரு பெண் யாழினி மருத்துவம் பயின்று வருகிறார்.
திமுக அனுதாபி என்பதால் தற்போதைய அதிமுக ஆட்சியில் ரவி ஆறுமுகம் முக்கிய பதவி ஏதும் வழங்கப்படாமல் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவி ஆறுமுகத்தின் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்இரங்கல் தெரிவித்துள்ளார்.