கராத்தேவை பதவி நீக்கம் செய்ய அதிமுக கோரிக்கை
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக கோரிக்கைவிடுத்துள்ளது.
மேயரான ஸ்டாலினை ஒடுக்குவதற்காக அதிமுக தலைமையால் கொம்பு சீவி விடப்பட்டவர் கராத்தே. இதையடுத்து நீதிமன்றஉத்தரவால் ஸ்டாலின் தனது பதவியை இழந்துவிட கராத்தேவே மாநகராட்சியை நடத்தினார்.ஆனால், கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் அதிமுக தலைமையுடன் மோதல் ஏற்பட்டதால் கைதாக இருந்த நிலையில்தலைமறைவானார். தேர்தல் நடக்க இருந்த நிலையில் திரும்பி வந்தார்.
இப்போது அமைச்சர் ஸ்டாலினுக்கு வலதுகரமாக மாறிவிட்டார்.
இந் நிலையில் வரும் 30ம் தேதி மாநகராட்சி மன்றக் கூட்டம் நடைபெறும் என்று கராத்தே அறிவித்துள்ளார்.
இந் நிலையில் மாநகராட்சியின் ஆளுங்கட்சித் தலைவர் சுகுமார்பாபு, மாநகராட்சி கமிஷனர் விஜயகுமாரை சந்தித்து ஒரு மனுகொடுத்தார். அதில்,
சென்னை மாநகராட்சி துணை மேயர் தியாகராஜன் எவ்வித தகவலும் இன்றி காணாமல் போனார். தொடர்ந்து நடந்த மூன்றுகூட்டங்களிலும் துணை மேயர் கலந்து கொள்ளவில்லை. அரசு நிகழ்ச்சியான குடியரசு தின நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. மழை வெள்ளத்தால் சென்னை நகரம் பாதித்த போது, பதவியில் இருந்த துணை மேயர் எவ்வித மக்கள்பணியும் செய்யவில்லை.
இதனால், மக்களின் நம்பிக்கையை துணை மேயர் இழந்து விட்டார். தொடர்ந்து நடந்த மூன்று மன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளாததால் தியாகராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இதற்காக மன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.