102 நகராட்சிகளில் 84ல் திமுக கூட்டணி வெற்றி
சென்னை:தமிழகத்தில் தேர்தல் நடந்த 102 நகராட்சிகளில் 84 இடங்களில் திமுக கூட்டணி வென்றுள்ளது. வெறும் 7நகராட்சிகளில் மட்டுமே அதிமுக வென்றுள்ளது.
அதே போல தேர்தல் நடந்த 50 மூன்றாம் நிலை நகராட்சிகளில் 32 இடங்களில் திமுக கூட்டணியும் வெறும் 6இடங்களில் அதிமுகவும் வென்றுள்ளன.
அதே போல இதுவரை 7,116 பேரூராட்சி வார்டுகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக 2,171 வார்டுகளையும்,அதிமுக 1,329 வார்டுகளையும் வென்றுள்ளது. ஆனால் சுயேச்சைகள் 2,259 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கைமேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
இதனால் நூற்றுக்கணக்கான பேரூராட்சிகளில் சுயேச்சைகளின் ஆதரவுடன்தான் நிர்வாகத்தை கைப்பற்ற முடியும் என்ற நிலைஉள்ளது.
திமுக தனது கூட்டணிக் கட்சிகளின் பலத்தையும், சில சுயேச்சைகளை வாங்கியும் கூட நிர்வாகத்தைப் பிடித்து விட முடியும்.ஆனால் அதிமுகவின் நிலைதான் மிகவும் மோசம். கூட்டணிக் கட்சியான மதிமுகவுக்கு சொல்லிக் கொள்ளும்பட இடங்கள்கிடைக்கவில்லை என்பதால் சுயேச்சைகளையே முழுக்க முழுக்க அண்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இருப்பதை விட ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் காண்ட்ராக்ட், கமிஷன் போன்றஆதாயங்கள் கிடைக்கும் என்பதால் சுயேச்சைகள் ஆளுங்கட்சியான திமுக பக்கமே அதிகம் சாயக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
பேரூராட்சிகளில் கிட்டத்தட்ட 30 சதவீத இடங்களை சுயேச்சைகளே வென்றுள்ளனர். நகராட்சிகளிலும் இதே நிலைதான். இங்கு20 சதவீத வார்டுகளை சுயேச்சைகள் வென்றுள்ளனர். பல நகராட்சிகளில் கட்சி வேட்பாளர்களை விட சுயேச்சைகள்தான் அதிகம்வெற்றி பெற்றுள்ளனர்.
ஊட்டி, கொளச்சல், பத்மநிாபபுரம் ஆகிய நகராட்சிகளில் சுயேச்சைகளே அதிகம் வென்றுள்ளனர். எனவே இங்கு யார் நகராட்சித்தலைவராகப் போவது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நகராட்சிகளில் வெற்றி நிலவரம்:
மொத்த நகராட்சிகள்: 102
முடிவு அறிவிக்கப்பட்டவை: 102
திமுக கூட்டணி: 84
அதிமுக கூட்டணி: 7
இழுபறி: 11 (இங்கு சுயேச்சைகளே அதிகம் வென்றுள்ளதால் அவர்கள் ஆதரவு பெறும் கட்சியே தலைவர் பதவிக்கு வர முடியும்).
3ம் நிலை நகராட்சிகள்:
மொத்த 3வது நிலை நகராட்சிகள்: 50
முடிவு அறிவிக்கப்பட்டவை: 50
திமுக கூட்டணி: 32
அதிமுக கூட்டணி: 6
இழுபறி: 12
சில நகராட்சி, பேரூராட்சிகளில் சுயேச்சைகளின் கை ஓங்கியிருப்பதால், அவர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.தேவைக்கேற்ப இவர்களுக்கு ரேட் நிர்ணயம் செய்யப்படும் எனத் தெரிகிறது.