ஈராக்: தற்கொலைத் தாக்குதலில் 70 பேர் பலி
பாக்தாக்: ஈராக்கில் உணவுப் பொருட்களுக்கு மத்தியில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த லாரி, பொதுமக்கள் மீது பாய்ந்து வெடித்ததில் 70 பேர் பரிதாபமாக இந்தனர். 150 பேர் படுகாயம் அடைந்தனர்.
சதாம் சாவுக்குப் பின்னர் ஈராக்கில் வன்முறைகள் பல மடங்கு அதிகரித்து விட்டன. அங்கு தற்கொலைப் படைத் தாக்குதல் இல்லாத நாளே இல்லை எனும் அளவுக்கு நிலைமை மகா மோசமாக உள்ளது.
மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், மசூதி, பேருந்து நிலையம், ஹோட்டல்கள்தான் அதிக அளவில் குண்டு வைத்துத் தகர்க்கப்படுகின்றன. கார்கள், லாரிகளில் குண்டுகளை கொண்டு வந்து தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்படுகிறது.
நேற்று மொசூல் அருகே உள்ள தல்அபார் நகரில் ஒரு மார்க்கெட்டுக்கு லாரி ஒன்று வந்தது. அதில் உணவுப் பொருட்கள் இருந்தது. ஆனால் அவற்றுக்கு மத்தியில் சக்தி வாய்ந்த குண்டுகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
அந்த பகுதியில் ஏற்கனவே தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக மார்கெட் மூடப்பட்டு இருந்ததால் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்தது.
புதிதாக உணவு பொருட்களுடன் ஒரு லாரி மார்க்கெட்டுக்கு வந்ததும் பொதுமக்கள் அந்த லாரியை சூழ்ந்து கொண்டனர். பாதுகாப்புக்கு நின்ற ராணுவத்தினரும் அது உணவு பொருள் கொண்டு வந்த லாரி என நினைத்து உள்ளே அனுமதித்தனர்.
லாரியை நிறுத்துவது போல வந்த டிரைவர், திடீரென பொதுமக்கள் மீது லாரியை செலுத்தி குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் குண்டுகள் பலத்த சப்தத்துடன் வெடித்தது. இந்த பயங்கர சம்பவத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் உயிர்யிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.