அண்ணா பல்கலை. வளாகத்தில் திடீர் தீ
சென்னை:சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கிட்டங்கியில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) கிட்டங்கி உள்ளது. இங்கு மாணவர்கள் பயன்படுத்தும் தொப்பிகள், ஷூக்கள், சீருடை ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.
இந்த கிட்டங்கியில் இன்று காலை திடீர் என தீவிபத்து ஏற்பட்டது. தீயில் கருகி கிட்டங்கியில் உள்ள அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலானது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த கிட்டங்கி எப்போதும் பூட்டப்பட்ட நிலையிலேய இருக்குமாம். உள்ளே மின் இணைப்பும் கிடையாது. இந்த நிலையில் எப்படி தீவிபத்து ஏற்பட்டது என்று தெரியவில்லை. சதிச் செயலாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தீவிபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ. 1 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதனின் வீட்டில் மர்ம குண்டுவெடிப்பு நடந்தது. அது எதனால் ஏற்பட்டது என்பதே இன்னும் தெளிவாக விளங்காத நிலையில் உள்ளது. இந்த நிலையில் கிட்டங்கியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications