குமரி மீனவர்கள் சாவு: சட்டசபையில் சலசலப்பு
சென்னை:குமரி மாவட்ட மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை அதிமுக சட்டசபையில் எழுப்பியது.
சட்டசபை நோற்று காலை தொடங்கியதும், அதிமுக உறுப்பினர் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜான் ஜோசப் ஆகியோர் குமரி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பிரச்சினை எழுப்பினர்.
ஜெயக்குமார் கூறுகையில், 5 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இந்த அவையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஆவுடையப்பன், அரசு தரப்பிலிருந்து இதுகுறித்து விவரங்கள் வரும்வரை இதற்கு அனுமதியளிக்க முடியாது என்றும், பின்னர் விவாதிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அதிமுக தரப்பில் இதனை ஏற்றுக்கொள்ளாமல் உடனடியாக இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று குரல் எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆவேசத்தோடு இந்த பிரச்சனை மிக முக்கியம் என கூறி விவாதிக்க வேண்டும் என கேட்கிறார்கள்.
எல்லோருடைய கவனத்திற்கும் உரிய மிக முக்கியமான பிரச்சனைதான் இது. இலங்கை ராணுவத்தின் வன்முறையால் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அவர்கள் குறிப்பிட்டனர்.
இது குறித்த முழு விவரங்களை அறிவதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜனை அனுப்பியிருக்கிறேன். அவர் விவரங்களை தெரிந்து சொல்லுவார்.
நானும் மத்திய அரசை தொடர்பு கொண்டு இது குறித்த சில விவரங்களை கேட்டிருக்கிறேன். இரு தரப்பிலும் எனக்கு இன்று (நோற்று) இந்த அவை முடிவதற்குள் தகவல் கிடைத்தால் பதிலளிக்கிறேன். அல்லது பின்னர் இது குறித்து விவாதிக்கலாம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications