தமிழக பந்த் முழு வெற்றி - போக்குவரத்து முடங்கியது இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது - புதுவையிலும் வெற்றி
சென்னை:பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுசேச்ரியில் நடந்த பந்த், அமைதியாக, எந்தவித அசம்பாவிதமும் இன்றி வெற்றிகரமாக நடந்தது. பந்த் காரணமாக இரு மாநிலங்களிலும் போக்குவரத்து முடங்கியது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்தது.
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் திமுக கூட்டணி இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இந்த பந்த் அழைப்புக்கு பல்வேறு சங்கங்கள், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. தேமுதிகவும் ஆதரவு அளித்தது.
காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது. பந்த் காரணமாக தமிழகமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. பஸ்கள், ரயில்கள், லாரிகள், ஆட்டோக்கள், டாக்சிகள் என எந்த வாகனமும் ஓடாததால் சாலைகள் அனைத்துமே வெறிச்சோடிக் கிடந்தன.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி நகரங்களிலிருந்து இன்று பகலில் இயக்கப்படுவதாக இருந்த விமானங்களின் நேரங்களை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மாற்றி அமைத்தது.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. பரீட்சைகள் நடக்காத பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.
அரசு நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல பல்கலைக்கழகங்ளும் கூட மூடப்பட்டிருந்தன.
மதுக் கடைகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. இதேபோல தியேட்டர்களிலும் இன்று பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
முழு அடைப்புப் போராட்டத்திலிருந்து அத்தியாவசியப் பணிகளான பால், குடிநீர், தொலைபேசி, மின்சாரம், மருத்துவமனை, தீயணைப்பு ஆகிய துறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
முழு அடைப்பைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சென்னையில் ...
பந்த்தையொட்டி சென்னை மாநகரம் முதல் வெறிச்சோடிக் கிடந்தது. வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் அண்ணா சாலை ஈ, காக்கா இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது.
மின்சார ரயில்கள் முற்றிலும் ஓடவில்லை. எழும்பூர், சென்டிரல் ரயில் நிலையங்கள் வெறிச்சோடிப் போயின. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், மக்கள் நடமாட்டம் இன்றி மாநகரம் அமைதியாக காணப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் மட்டுமே ஓரளவு ஓடின.
மதுரையில் ...
மதுரை நகரில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பெரியார், அண்ணா, பழங்காநத்தம், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.
நகரின் முக்கியப் பகுதிகளான திண்டுக்கல் சாலை, டவுன்ஹால் சாலை, சிம்மக்கல், கோரிப்பாளையம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடிக் கிடந்தன.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
கோவையில் ...
கோவை நகரிலும் பந்த் முழு அளவில் இருந்தது. மக்கள் நெரிசல் அதிகம் உள்ள ஒப்பணகார வீதி, கிராஸ் கட் சாலை, அவினாசி சாலை ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடிக் கிடந்தன. பேருந்து நிலையங்களிலும் மக்கள் நடமாட்டம் முற்றிலும் இல்லை. விமானப் போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டதால் ஒரு விமானமும் இயக்கப்படவில்லை.
திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் இதே நிலைதான். தொழில் நகரங்களான சிவகாசி, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடிக் கிடந்தன.
தமிழகம் முழுவதும் உள்ள 1 லட்சம் லாரிகளும் இன்று இயங்கவில்லை. புதுவையிலும் பந்த் முழு அளவில் இருந்தது.
எந்த அசம்பாவிதமும் இன்றி இரு மாநிலங்களிலும் பந்த் முழு வெற்றியுடன் முடிவடைந்தது.
பந்த் முடிந்ததும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலிருந்து பயணிகளின் நலனுக்காக சிறப்பு மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications