விமானப் படை இந்தியாவுக்கு எதிரானதல்ல: விடுதலைப் புலிகள்
கொழும்பு: விடுதலைப் புலிகளின் வான் புலிகள் விமானப் படை, இந்தியாவுக்கு எதிரானது அல்ல என புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:
இலங்கை அரசும், சிங்கள பேரின வாதமும் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு, இன அழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டதால் தான் ஈழ விடுதலை போராட்டம் தீவிரமடைந்து, இன்று ஒரு அரசை இயக்குகிற அளவுக்கு வலுப் பெற்றுள்ளது.
இந்த வகையில் எங்கள் படையின் கட்டுமான வளர்ச்சியின் தொடர்ச்சியே விமானப் படை தோற்றமாக மாறியிருக்காது. இலங்கை விமானப் படை எங்கள் மண்ணில் தொடர்ந்து குண்டு வீசியதால் அதற்கு பதில் நடவடிக்கையை நாங்கள் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் விமானப் படையை பயன்படுத்தினோம்.
எங்கள் விமானப்படை இந்தியாவிற்கோ, மற்ற நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்காது. தமிழ் மக்களை காப்பதற்காகவும், எங்கள் தாயகத்தை விடுவிப்பதற்காகவும் தான் நாங்கள் படையை உருவாக்கியுள்ளோம்.
இனப்படுகொலையை நடத்தி வரும் இலங்கை அரசு படைகளுக்கு எதிராக எங்களது விமானப்படை செயல்படும். தமிழ் மக்கள் பெறும் சுதந்திரம், அவர்களுடைய விடுதலை, இந்திய தேசத்திற்கும் மிகுந்த நன்மையையும் நல்லுறவையும் ஏற்படுத்தும்.
ஒருபோதும் இந்திய அரசுக்கும், மக்களுக்கும் எதிரான போக்கை ஈழ விடுதலை போராட்டமோ, விடுதலைப்புலிகளோ கடைப்பிடிக்க மாட்டார்கள்.
தமிழர்களின் படை பலம் பெருகுவதால் எந்த அரசும் கவலைப்பட தேவையில்லை. எங்கள் படை பலம் பெருகி தமிழ் ஈழம் சுதந்திரம் அடைந்தால் அது இந்து மகா கடல் பிராந்தியத்தில் பூரண அமைதியை ஏற்படுத்தும்.
எங்களிடம் 1998ம் ஆண்டிலிருந்தே விமானப்படை வளர்ச்சி ஆரம்பித்து விட்டது. இந்த விமானப் படையைப் பற்றி இலங்கை அரசு சாதாரணமாக சொல்லி இருப்பது, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல இருக்கிறது.
இலங்கை விமானப் படையின் மனித தாக்குதல் அவலங்களை தடுத்து நிறுத்தவே அவர்கள் தளத்திற்கு சென்று தாக்கினோம். இதே போல இன்னும் ஏற்படுத்த முடியும்.
தமிழ்நாட்டுத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் எப்போது தொப்புள் கொடி உறவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இலங்கை படை தமிழக மீனவர்களை சுட்டு கொன்று விட்டு அந்த பழியை எங்கள் மீது சுமத்தி ஈழத் தமிழ் மக்கள், தமிழ் நாட்டு மக்கள் இடையே உள்ள உறவை இல்லாமல் செய்ய முயற்சிக்கிறார்கள்.
இந்திய - இலங்கை கூட்டு ரோந்து என்ற பெயரில் எங்களுக்கும் இந்திய படைக்கும் இடையே மோதல் நிலையை உருவாக்கி அதன் மூலம் நன்மை அடைய இலங்கை அரசு சதி செய்கிறது. இந்த சதிக்குள் இந்திய அரசு விழுந்து விடாது என நம்புகிறோம் என்றார்












Click it and Unblock the Notifications