இலங்கை கடற்படையை கண்டித்து விஜய்காந்த் தலைமையில் மீனவர்கள் போராட்டம்
நாகர்கோவில்:குமரி மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் கலந்து கொண்டார்.
குமரி மாவட்டம் சின்னத்துறை மற்றும் நீரோடியைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
இதில் மரியஜான், லீனிஸ், ஜீசஸ்தாஸ் ஆகிய 3 மீனவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஜஸ்டின், சதீஷ் ஆகியோர் குண்டடிபட்டதும் கடலில் விழந்தனர். அவர்களின் நிலை என்ன என்று இதுவரை தெரியவில்லை.
நடுக்கடலில் நடந்த இந்த அட்டூழியத்தை கண்டித்து குமரி மாவட்ட மீனவர்கள் கடந்த 4 நாட்களாக யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.
மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்வத்துக்கு கண்டனம் தெரிவித்து கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு சார்பில் இன்று நாகர்கோவில் ஆட்சியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், கமியூனிஸ்டுகள், மதிமுக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சியும் ஆதரவு தெரிவித்தது. மேலும் இந்த போராட்டத்தில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை நாகர்கோவில் ஆட்சியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் எம்பி பெல்லார்மின் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் விஜய்காந்த் கலந்து கொண்டார். விஜய்காந்த் போராட்டத்தில் பங்கேற்றதால் தேமுதிகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தால் நாகர்கோவிலில் பெரும் பதட்டம் நிலவியது. இதனால் நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்கு இடையிலான போக்குவரத்து வெறு வழியாக மாற்றி விடப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும் விஜய்காந்த் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்றார். அங்கு அவர்களது உறுவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பலியான மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25,000 நிதியுதவியும், காயமுற்றோர் குடும்பத்திற்கு தலா 5,000 ரூபாயும் நிதியுதவியும் வழங்கினார்.












Click it and Unblock the Notifications