காவிரிக்காக காரைக்காலில் அதிமுக உண்ணாவிரதம்
சென்னை:காவிரி பிரச்சனைக்காக வரும் 7ம் தேதி அதிமுக சார்பில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும் என காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வெளியிட்டு 2 மாதங்கள் ஆன பிறகும்,, மத்திய அரசின் அரசிதழில் தீர்ப்பை வெளியிடுவது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் புதுவை அரசு இருந்து வருகிறது.
தமிழக அரசு போல் மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதைக் கண்டித்து அதிமுக காரைக்கால் மாவட்ட கழகத்தின் சார்பில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகில் வரும் 7ம் தேதி சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
அதிமுக இளைஞர் அணி செயலாளர் சம்பத் தலைமையிலும், புதுச்சேரி மாநில செயலாளர் எம்எல்ஏ. அன்பழகன், காரைக்கால் மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்திசேகர் ஆகியோர் முன்னிலையிலும் போராட்டம் என்று கூறியுள்ளார்.
மோர்தனா அணை திறப்பு-அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றி
இதற்கிடையே, வேலூர் மாவட்டம் மோர்தனா அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது, அதிமுக அறிவித்த போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவிலுள்ள மோர்தானா அணையிலிருந்து ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் திமுக பதவியேற்று 11 மாதங்கள் ஆகியும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.
இதற்காக ஏப்ரல் 4ம் தேதி போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தேன். இதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மாலை 4 மணிக்குள் தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவித்துள்ளார்.
அதே சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அமைச்சர் துரைமுருகனும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரனும் இது குறித்து சிந்திக்காத நிலையில் அதிமுக இந்த பிரச்சனைக்கு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தப் பின்னர் இவ்வாறு அறிவித்திருப்பது அதிமுகவிற்கு மாபெரும் வெற்றியாகும்.
இதே போல் புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி துணை நகரம் அமைப்படுவதை எதிர்த்து அதிமுக போராடிய பின்னர் இந்த திட்டம் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளது அதிமுகவிற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications