சார்க் நாடுகளின் வளர்ச்சிக்கு கலாமின் 6 அம்சத் திட்டம்
டெல்லி:2017ம் ஆண்டுக்குள் ஏழ்மை, நோய்கள், வறுமை, சுகாதார சீர்கேடுகள் அற்றதாக சார்க் நாடுகள் அமைய 6 அம்சத் திட்டம் ஒன்றை பரிந்துரைத்துள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
சார்க் மாநாட்டையொட்டி டெல்லி வந்துள்ள சார்க் நாடுகளின் தலைவர்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்துப் பேசினர்.
சார்க் நாடுகளின் தலைவர்கள், கலாமுடன் பாரம்பரியம் மிக்க முகல் கார்டனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் தலைவர்களிடையே கலாம் உரையாற்றினார்.
அப்போது சார்க் நாடுகளுக்கான திட்டம் 2017 என்ற பெயரில் 6 அம்சத் திட்டம் ஒன்றை அவர் பரிந்துரைத்தார்.
கலாம் பேசுகையில், சில சார்க் நாடுகளில் தற்போது சிசு இறப்பு விகிதம் 1000 பேருக்கு 260 என உள்ளது. இதை 10 ஆக குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அனைத்து சார்க் நாடுகளும் தண்ணீரால் பரவும் நோய்கள், சுகாதார சீர்கேடுகளிலிருந்து விடுபட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
2017ம் ஆண்டுக்குள் சார்க் நாடுகள் 100 சதவீத கல்வி அறிவை எட்ட வேண்டும். தற்போது இது சில நாடுகளில் 40 சதவீதமாகவே உள்ளது. இதை மாற்ற வேண்டும்.
சார்க் நாடுகளில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமமான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். இதன் மூலம் ஒட்டுமொத்த வளர்ச்சியை நாம் அடையலாம்.
சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் என்ற வார்த்தையே இருக்கக் கூடாது.
சீரிய முறையில் திட்டமிட்டு செயலாற்றினால் இந்த இலக்கை வெகு எளிதில் அடைய முடியும் என்றார் கலாம்.
கலாமுடனான சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமர் செளக் அஜீஸ், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக் ஷே, மாலத்தீவு அதிபர் கயூம், நோபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய், பூடான் பிரதமர் லியேனாபா காண்டு வாங்சுக், வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் பக்ருதீன் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications