விமான தாக்குதலில் புலிகளின் கடற்படை முகாம் தகர்ப்பு
கொழும்பு:முல்லைத் தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்படை முகாமை தகர்த்து விட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விமானப்படை செய்தித் தொடர்பாளர் அஜந்த டி சில்வா கூறுகையில், முல்லைத் தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளின் கடற்படை தலைமை முகாம் உள்ளது. இந்த முகாம் மீது இன்று விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.
இத்தாக்குதலில் புலிகளின் முகாம் முற்றிலும் சேதமடைந்தது. புலிகளின் கடற்படை படகுகள் சேதமடைந்ததா என்பது குறித்து தகவல் இல்லை. இந்த முகாம்தான் கடல் புலிகள் பிரிவின் தலைமையகம் போல செயல்பட்டு வந்தது என்றார்.
இருப்பினும் புலிகள் தரப்பிலிருந்து இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.
ராணுவத் தாக்குதலில் 35 விடுதலைப் புலிகள் பலி
இதற்கிடையில் மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடந்த கடும் சண்டையில் 35 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த மோதலில் 23 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். மட்டக்களப்பின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் நடந்த மோதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறினார்.
ஆனால் இப்படி ஒரு சண்டையே நடைபெறவில்லை என மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்புக்கு அருகே உள்ள அம்பாரையில்தான் விடுதலைப் புலிகள் வைத்த குண்டில் சிக்கி பஸ் ஒன்று சேதமடைந்தது. அதில் பயணம் செய்த 16 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல, மன்னார் மாவட்டத்தின் வட மேற்குப் பகுதியில் நடந்த சண்டையில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவ செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
இரு மோதல்களிலும் ஒரு ராணுவ வீரர்தான் கொல்லப்பட்டதாக ராணுவ செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து புலிகள் தரப்பிலிருந்து தகவல் ஏதும் இல்லை.












Click it and Unblock the Notifications