சிறுபான்மையினருக்கு கோட்டா: ராமதாஸ் வரவேற்பு
சென்னை:தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என பாமக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சட்டசபையிலும் கோரிக்கை விடுத்து வந்தது.
இந்த நிலையில் தற்போது கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பாராட்டி வரவேற்கிறேன்.
உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும். அது மிக மிக முக்கியம். எனவே நாட்டில் உள்ள தலை சிறந்த சட்ட நிபுணர்களைக் கொண்டு இந்த வழக்கில் தமிழக அரசு வாதாட வேண்டும்.
பாமகவும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பதால், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட உள்ளது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications