மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக போராட்டம்
சென்னை: குடிநீர் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்காத சேலம் மாநகராட்சியை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் சேலம் மாநகராட்சி அலுவலகம் எதிரே வரும் 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாநகராட்சியில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரின்றி சிரமமப்படுகின்றனர். இது மட்டுமல்லாது, மாநகராட்சி நிர்வாகத்திற்கு குடிநீர் கட்டணம் கட்டுவதில் காலதாமதமானால் வீட்டிலுள்ள பொருட்களை ஜப்தி செய்து கொடுமைப்படுத்துகின்றனர்.
இது குறித்து மாநகராட்சியில் பிரச்சனை எழுப்புவதற்கு அதிமுக உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை. இதை மீறிக் கேட்டால் அடியாட்களை கொண்டு மிரட்டுகிறார்கள்.
எனவே மக்களின் பிரச்சனையை கேட்க தவறிய திமுக அரசை எதிர்த்தும், திமுக தலைமையிலான மாநகராட்சியை கண்டித்தும், சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு வரும் 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இதற்கு கழக அமைப்பு செயலாளர் செம்மலை தலைமை தாங்குவார். சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடைசலம் முன்னிலை வகிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications