2 பேருக்கு தான் போட்டியே.. ஒன்று ஸ்ரேயாஸ் ஐயர்.. இன்னொன்று கவுதம் கம்பீர்.. எத்தனை தவறுடா சாமி!
சவுதாம்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் ஆகிய இரு தரப்புமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் பயிற்சியாளர் கம்பீர் செய்த தவறுகளை தனி பட்டியலாகவே போடலாம்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக இந்திய அணி 4-0 என்ற கணக்கில் டி20 தொடரில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்துள்ளது. 4 மாதங்களுக்கு முன் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, 4-0 என்று தோல்வி அடைந்திருப்பது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய அணி 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்ததே இல்லை. அந்த புதிய வரலாறு புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கம்பீர் கூட்டணியால் படைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் இந்த படுதோல்விக்கு இவர்கள் இருவருமே முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றனர்.
ஏனென்றால் எந்தப் போட்டியிலும் பவுலர்களுக்கான திட்டங்களையோ, பேட்ஸ்மேன்களின் பேட்டிங் வரிசையையோ சரியாக அமைக்கவில்லை. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 2வது போட்டியிலேயே பெஞ்ச் செய்யப்பட்டார். அவருக்கு மாற்றாக வந்த வைபவ் சூர்யவன்ஷியை விமர்சிக்க தேவையில்லை என்றாலும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
மறுபக்கம் அபிஷேக் சர்மா இன்னும் ஸ்பின்னர்களுக்கு எதிரான தனது பேட்டிங்கை இன்னும் வலுப்படுத்தவில்லை. அதேபோல் கூடுதல் வேகத்தில் ஷார்ட் பால் வீசினால், எளிதாக விக்கெட்டை பறிகொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். திலக் வர்மாவை ஒரு போட்டியில் கூட டாப் 4 பேட்டிங் வரிசையில் களமிறக்கவில்லை. சாம் கரணை இங்கிலாந்து அணி மிகச்சிறப்பாக பயன்படுத்தியது.
அவரின் கட்டர் பந்துகள் இங்கிலாந்தில் சிறப்பாக எடுபட்டன. ஆனால் சிவம் துபேவை 10வது ஓவருக்கு பின்னரே அட்டாக்கில் கொண்டு வந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். பிரின்ஸ் யாதவ், பிரசித் கிருஷ்ணாவுக்கான திட்டங்களையும் சரியாக கொடுக்கவில்லை. அர்ஷ்தீப் சிங் பவர் பிளேவுக்கு பின் தன்னுடைய பணி முடிவடைந்துவிட்ட நிலையிலேயே இன்னும் ஆடி வருகிறார். டெத் ஓவர்களில் அர்ஷ்தீப் சிங் ஷர்துல் தாக்கூரை நினைவுபடுத்துகிறார்.
அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கான வீக்னஸை கொஞ்சம் புரிந்து கொள்ளாமல் பவுலிங் திட்டங்களை இந்திய அணி உருவாக்கியது. ஆனால் இங்கிலாந்து அணி ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் பிரத்யேக திட்டத்துடன் களமிறங்கியது. இந்த தவறுகளை எல்லாம் இந்திய அணி வரும் நாட்களில் சரி செய்யவில்லை என்றால், ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பு பறிபோவது நிச்சயம்.














Click it and Unblock the Notifications