எஸ்.ஜானகியின் இறுதி சடங்கு எப்போது? குடும்பத்தினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை: பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற பின்னணி பாடகியான எஸ்.ஜானகி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், ஜானகியின் இறுதி சடங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இது குறித்து குடும்பத்தினர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "ஜானகி மறைந்த நேரத்தில் அவருடன் மருமகள் உமா முரளி, பேத்தி அப்சரா வைத்யுலா, பேத்தியின் கணவர் கணேஷ் சந்திரசேகர் ஆகியோர் இருந்தனர்.

ஜானகியின் இறுதி சடங்கு, நாளை மைசூரில் நடைபெறும். நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் திரை துறையினர் அஞ்சலி செலுத்தவதற்காக வைக்கப்படும். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு, மாலை 5 மணியளவில் மைசூரில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் குடும்ப முறைப்படி இறுதி சடங்கு செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக ஜானகியின் உடல்நிலை குறித்தும் அவரது மறைவு குறித்தும் மைசூர் அப்பல்லோ பிஜிஎஸ் மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், "ஜானகி இன்று மதியம் 12.49 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்டபோது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியு-க்கு மாற்றப்பட்டார்.
பல்துறை மருத்துவர்களின் தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டிருந்தபோதும்.. சிகிச்சையின்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ நெறிமுறைகளின்படி உடனடியாக அவருக்கு சிபிஆர் போன்ற அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் உயிர் காப்பு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.
மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும், தொடர் மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனது. இதனால் அவர் இரவு 7.30 மணிக்கு உயிரிழந்தார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications