எஸ்.ஜானகியின் மறைவு.. இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! - முதல்வர் விஜய்
சென்னை: தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய், "இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

முதல்வர் விஜய்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.
அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்." என்று தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் இரங்கல்
"இசைக்குயில் எஸ்.ஜானகி மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியவர் எஸ்.ஜானகி" என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, "தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று ரஜினிகாந்த் பதிவிட்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, "பிரபல பின்னணி பாடகி திருமதி. S ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிமையான குரலால் வருடிய திருமதி. ஜானகி அவர்கள், தனது ஆயிரக்கணக்கான பாடல்கள் வழியாக மக்களின் வாழ்வின் ஒவ்வொரு உணர்வுக்கும் குரலாக இருந்தவர்.
தமிழ் உள்ளிட்ட 20 இந்திய மொழிகளில் பின்னணி குரலாக ஒலித்து அவர் பாடிய கீதங்கள் மக்கள் மனங்களில் என்றும் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன. அவரது மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரை மற்றும் இசைத் துறைகளைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்." என்று பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications