டெல்லி மாநகராட்சி தேர்தல்-பாஜக பெரும் வெற்றி
டெல்லி:டெல்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பலம் பெறும் நிலையை எட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி கிடைத்துள்ளது.
டெல்லி மாநகராட்சியின் 272 வார்டுளுக்கு தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்தத்திலிருந்தே பாஜக வெற்றியைக் குவிக்கத் தொடங்கியது. இதுவரை 64 வார்டுகளை பாஜக வென்றுள்ளது. 170 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது.
டெல்லி மாநிலத்தில் ஆட்சி புரிந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு 21 வார்டுகளே கிடைத்துள்ளன. 49 வார்டுகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.
சுயேச்சைகள் உள்ளிட்டோர் 14 இடங்களில் வென்றுள்ளனர். 34 வார்டுகளில் முன்னணியில் இருந்து வருகின்றனர்.
பாஜக மிகப் பெரும் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. பாஜக தொண்டர்கள் தலைநகர் முழுவதும் பட்டாசுகளை வெடித்தும், ஆட்டம், பாட்டத்துடனும் கொண்டாடி வருகின்றனர்.
கடைகளுக்கு சீல் வைக்கும் பிரச்சினை, விலைவாசி உயர்வு, ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை ஆகியவையே காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 108 வார்டுகளில் வென்றிருந்தது. பாஜக 20, பகுஜன் சமாஜ் 2 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இப்போது பாஜக மிகப் பெரும் வெற்றியைப் பெறும் நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications