சர்ச்சை சி.டி: சரணடைகிறார் ராஜ்நாத் சிங்:பாஜக மக்கள் கோப தினம் அனுஷ்டிப்பு
டெல்லி:முஸ்லீம்களை சிறுமைப்படுத்தும் வகையிலான சிடியை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால் இன்று நீதிமன்றத்தில் சரணடைய முடிவு செய்துள்ளார் ராஜ்நாத் சிங். இந்த சம்பவத்தைக் கண்டித்து இன்று மக்கள் கோப தினமாக மாநிலத் தலைநகரங்களில் பாஜகவினர் அனுமஷ்டிக்கின்றனர்.
உ.பி. சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் ஒரு பிரசார சிடி வெளியிடப்பட்டது. அதில் முஸ்லீம்களை சிறுமைப்படுத்துவது போல பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்துத்துவாவை புகழ்வது போலவும் பல காட்சிகள் உள்ளன. இதுதவிர அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் ஆகியவையும் அதில் இடம் பெற்றிருந்தன.
இதற்கு உ.பி.யில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சிடி விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட தேர்தல் ஆணையும் ஏன் உங்களது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் மதக் கலவரத்தைதத் தூண்டும் வகையிலான சிடியை வெளியிட்டதற்காக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் மீது லக்னோ போலீஸில் 2 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைய ராஜ்நாத் சிங் முடிவு செய்தார். இதுதொடர்பாக நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இன்று கட்சியினர் புடை சூழ சரணடைகிறார் ராஜ்நாத் சிங். அவர் சரணடையும்போது அத்வானி, வெங்கய்யா நாயுடு, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் உடன் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மீதான உ.பி. போலீஸின் நடவடிக்கையைக் கண்டித்து மாநிலத் தலைநகரங்களில் இன்று மக்கள் கோப தினம் அனுசரிக்கப்படும் எனவும் பாஜக அறிவித்துள்ளது.
இதற்கிடையே பாஜக சிடி மீதான விவகாரத்தை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா விசாரிக்கக் கூடாது என பாஜக கூறியுள்ளது. நவீன் சாவ்லா ஒரு காங்கிரஸ்காரர், அவர் மீது பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. எனவே அவர் நடுநிலையுடன் விசாரிப்பார் என நம்ப முடியாது பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் முன்பு நக்வி இன்று ஆஜராகி பாஜக தரப்பு விளக்கத்தை அளிக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications