பாலாற்றில் அணை: தடுக்க நடவடிக்கை-துரைமுருகன்
சென்னை: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என பொதுப்பணிதுறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டசபையில் இதுகுறித்து எழுப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. இது சம்பந்தமாக ஆந்திர முதல்வர் ராஜ சேகர ரெட்டியை சந்திக்க அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஏற்கனவே சென்று அம்மாநில முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளனர்.
அப்போது அவர், அப்படி ஒரு எண்ணம் இருந்தால், தமிழக அரசுக்கு விபரம் தெரிவிப்போம் என உறுதியளித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அணை கட்ட ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டதாக வெளியான தகவல் குறித்து ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
பிறகு பூமி பூஜை நடப்பதாக வந்த தகவலை அடுத்து, இந்த வருடம் ஜனவரி மாதம் ஆந்திர முதல்வருக்கு நானே கடிதம் எழுதினேன். அதற்கு அவர்கள் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பதில் அனுப்பியிருந்தனர்.
நேற்று முன்தினம் ஆந்திர முதல்வரை டெல்லியில் சந்தித்தபோது இது குறித்து கேட்டேன். அணை கட்டும் பணியை ஆரம்பிக்க நாள் எதுவும் குறிக்கப்படவில்லை. விவரம் தெரிந்ததும் தெரிவிப்பதாக கூறினார்.
இந்த அணை வனப்பகுதியில் கட்டப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தால், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதுகுறித்து ஏதேனும் அனுமதி கோரப்பட்டதா என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ராஜாவிடம் கேட்டபோது அப்படி எதுவுமில்லை என்றார்.
தமிழக அரசு இதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. ஒப்பந்தத்தை மீறி ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications