தீவிரவாதத்தை அனுமதிக்க மாட்டோம்: கருணாநிதி
சென்னை: நாட்டுக்கு எதிராக தீவிரவாதத்தில் யாரேனும் ஈடுபட்டால் அதைப் பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்காது. தீவிரவாதத்தை அனுமதிக்க மாட்டோம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
திண்டிவனம் வெடிவிபத்து குறித்து எதிர்கட்சி தலைவர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் இன்று பேசினார். என்ன மாதிரியான குண்டு வெடித்தது என்பது குறித்து அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் தீவீரவாதிகளுக்கு அது சாதகமாகி விடும் என்றார் பன்னீர்.
இதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், தீவிரவாதத்தில் யார் ஈடுபட்டாலும், அது திமுகவை சேர்ந்தவராக இருந்தாலும், அதை பார்த்துக் கொண்டு இந்த அரசு சும்மா இருக்காது.
பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திகளை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்.
இன்னும் தீவிரமாக இருக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். என்ன மாதிரியான கோரிக்கையை அவர் விடுக்கிறாரோ, அதை குறித்து கொடுத்தால் அதையும் ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான கமிஷனரிடம் கூறி அதையும் விசாரிக்க சொல்லலாம்.
மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம். அதனால் அவர் குறித்து கொடுத்தால் அதை நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார் கருணாநிதி.