ஸ்டிரைக்கில் குதிக்கும் பெட்ரோல் பங்க்குகள்
டெல்லி: பல்வோறு கோரிக்கைகளை முன் வைத்து நாடு முழுவதும் பெட்ரோலிய நிறுவனங்கள் வரும் 13ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் பேரவை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இதன் செயலாளர் அஜய் பன்சால் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெட்ரேலிய வர்த்தகர்களுக்கு கமிஷன் தொகையை 5 சதவீதமாக உயர்த்த கோரியும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நஷ்டம் காட்டிய வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்ககூடாது எனவும் கோரி வருகிறோம்.
அதேபோல, எண்ணை நிறுவன அதிகாரிகளின் சர்வதிகார போக்குக்கு எதிராக முறையிட மேல் முறையீட்டு ஆணையம் அமைக்க கோரியும், பெட்ரோலில் கலப்படத்தை கண்டறிய சோதனை கருவிகள் வழங்க வேண்டும் என்றும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் இதுகுறித்து எந்த முயற்சியையும், மத்திய பெட்ரோலிய அமைச்சகமும், எண்ணை நிறுவனங்களும் எடுக்கவில்லை.
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வற்புறுத்தி, வரும் 13ம் தேதி நாடு முழுவதும் பெட்ரோலிய வர்த்தகர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
இதன் பின்பும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஏப்ரல் 28ம் தேதி முதல் பெட்ரோல் பங்க்குள் காலவரையின்றி மூடப்படும் என அவர் கூறியுள்ளார்.