காவிரி அனைத்து கட்சி கூட்டம்- ஜெ கண்டனம
சென்னை:காவிரி விவகாரத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் கருணாநிதி கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர் மன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து விளக்கம் மற்றும் வழிகாட்டு முறைகள் ஆகியவை குறித்து மனு தாக்கல் செய்வது குறித்து, 15ம் தேதி அனைத்து கூட்டத்தில் விவாதிக்க அதிமுக கலந்துக் கொள்ள வேண்டும் என 10ம் தேதியிட்ட கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
இக்கூட்டம் நடைபெற ஒரு நாளே உள்ள நிலையில், எத்தகைய மனுவை தயார் செய்துள்ளனர் என இதுவரையில் தெரியவில்லை. தமிழக நலனுக்காக செய்யப்பட்டுள்ளதா அல்லது வழக்கம் போல் கர்நாடகவின் நலனுக்காக உதவி செய்வதாக தயார் செய்யப்பட்டுள்ளதா என அறிய இதுவரை எந்த நகலும் அனுப்பப்படவில்லை.
இவர்களது தவறுக்கு மற்ற கட்சிகளும் உடந்தையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இக் கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதுவரை பொது பணித்துறைக்கு இந்த மனு வந்து சேரவில்லை. இதற்கு மேல் அதனை நகல் எடுத்து அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பி, அதை படித்து, 15ம் தேதி காலை 10 மணிக்கு விவாதம் செய்யவேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்கிறாரா.
உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் தமிழக அரசு உச்சநீதிமன்றம் போவதற்கு எண்ணவில்லை. திமுக அரசு திரும்பவும் நடுவர் மன்றத்திற்கு போகத்தான் நினைக்கிறது.
இதனால் தமிழக அரசின் மனு மீது விசாரணை நடத்த கூடாது என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்க வாய்ப்புள்ளது. அல்லது நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி இரண்டையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி அதுவரை மனு நடுவர் மன்றத்தில் கிடப்பில் போடப்படலாம்.
தமிழக அரசு ஏன் உச்சநீதிமன்றம் செல்லவில்லை என நான் கேட்டது கருணாநிதி இதுவரை பதில் கூறிவில்லை.
குறுவை சாகுபடிக்கு நீர் திறந்துவிடப்படும் என்ற கருணாநிதி அந்த பக்கம் வந்தால் மக்கள், இடைக்கால தீர்ப்பு படி நீர் வருமா அல்லது 205 டிஎம்சி நீர் வருமா என அவரிடம் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இதனால் நாளை மறுதினம் நடக்கவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்று தெரிகிறது.
உ.பியில் ஜெ பிரச்சாரம்:
இந் நிலையில் உத்தப் பிரதேச மாநில சட்டமன்ற பேரவை தேர்தலையொட்டி, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் அழைப்பை ஏற்று தேர்தல் பிரசாரத்திற்கு செல்கிறார் ஜெயலலிதா.
வரும் 23ம் தேதி அன்று அலகாபாத்தில் நடக்கும் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேசவுள்ளார்.
ஏற்கனவே பிரச்சாரத்துக்கு உ.பி. செல்ல இருந்த ஜெயலலிதா அதை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications