விழுப்புரம்: மின்னல் தாக்கி 8 பக்தர்கள் பலி!
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் என்ற இடத்தில் பெய்த கன மழையின்போது மின்னல் தாக்கி கோவில் விழாவுக்கு வந்த 8 பக்தர்கள் பரிதாபமாக பலியானார்கள்.
முண்டியம்பாக்கம் கூட்டு ரோட்டில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்திரை அமாவாசை என்பதால் நேற்று விழா கொண்டாடப்பட்டது. அக்கம் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் விழாவுக்கு வந்திருந்தனர்.
நேற்று இரவு சாமி அலங்காரம் நடந்தது. பின்னர் முண்டியம்பாக்கம் சுடுகாட்டிலிருந்து சாமியை ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது நள்ளிரவு நேரம். திடீரென கன மழை பெய்யத் தொடங்கியது.
பலத்த இடியும், மின்னலுமாக மழை பெய்ததால், பக்தர்கள் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கி காசி (38), ராஜேந்திரன் (38), மோகன் (44), வீரவேல் (42), பரமசிவம் (40), அருண் சுரேஷ் (38), ரெங்கநாதன் (40), கலியமூர்த்தி (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசு ரூ. 1 லட்சம் நிதியுதவி அறிவிப்பு:
இந் நிலையில் பலியான 8 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 1லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று சட்டசபையில், சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இறந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 1 லட்சம் நிவாரண உதவியை வழங்குமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications