எண்ணூரில் கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை
சென்னை: மத்திய அரசு கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை எண்ணூரில் அமைக்க திட்டமிட்டு, அதற்கான பூர்வாங்க சோதனையில் ஈடுபட்டுள்ளது.
சென்னையில் இதுகுறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில்சிபில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேசிய கடல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் கடல்நீரை குடிநீராக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.
இதற்காக பரிசோதனைக் கூடத்திலும், தூத்துக்குடி அருகே 400 மீட்டர் ஆழத்திலும் சோதனைகள் செய்யப்பட்டன. லட்சத்தீவிலும் பரிசோதனை தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 8 தளங்கள் அமைக்கவும் முடிவு செய்துள்ளோம்.
இந்த ஆய்வகங்களில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 5 கோடி லிட்டர் குடிநீர் தயாரிக்கப்பட்டுள்ளது. எண்ணூருக்கு அருகே 40 கி.மீ தூரத்தில் குடிநீர் தயாரிக்கும் மிதக்கும் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து 600 மீட்டர் கடலுக்குள் குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் 9 முதல் 12 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமுடைய நீரையும், கடலின் மேல் பகுதியில் 28 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள நீரையும் எடுத்து புதிய தொழில்நுட்பம் மூலம் குடிநீர் தயாரிக்க சோதனை நடந்து வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் தயாரிக்க முடியும். இதனால் சென்னையின் 40 சதவீத குடிநீர் தேவை பூர்த்தியடையும். இதற்கான செயல்விளக்கம் இன்று முதல் நடக்கிறது.
இதற்கும், ஏற்கனவே சென்னையில் செயல்படுத்தப்படும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications