மனைவி தொடர்ந்த வழக்கு-ஆஸ்திரேலியசாப்ட்வேர் என்ஜினியர் நீதிமன்றத்தில் ஆஜர்
மதுரை:ஆஸ்திரேலிய என்ஜீனியர் மீது மனைவி ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான அவர் வழக்கு போட்டு தனக்கு மனைவி தொந்தரவு தருவதாக கூறினார்.
மதுரையை சேர்ந்தவர் தீபா (28). மதுரை நீதிமன்றத்தில் தன் கணவர் ராமையா மீது வழக்கு தொடர்ந்தார். அதில், எனக்கும் கம்ப்யூட்டர் என்ஜீனியர் ராமையா என்பவருக்கும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் ஆண் குழந்தை பிறந்தது.
நாங்கள் டெல்லியில் வசித்த போது அவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அதிக வருவாயுடன் அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.
உன்னைக் கல்யாணம் செய்ததற்குப் பதில், பணக்கார பெண்ணை திருமணம் செய்திருக்கலாமே என அடிக்கடி என்னிடமே கூறுவார். மேலும், எனது மாமியாரும், மாமனாரும் வேறு அவரைத் தூண்டி விட்டு வந்தனர்.
இதனால் நான் மதுரைக்கு எனது பெறறோர் வீட்டுக்கு வந்து விட்டேன். இங்கு வந்த பிறகும் கூட அவரது தொல்லைகள் நீடித்தன. பின்னர் அவருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்து, என்னையும் குழந்தையும் அழைத்து சென்றார்.
அங்கேயும் என்னை அடித்து துன்புறுத்தினார். கத்தியால் ஒரு முறை கையை வெட்டினார். அதன் பின்னர் எனது வீட்டிலிருந்து 3 லட்சம் ரூபாய் பணம் வாங்கி வா என அனுப்பி விட்டார். அவருடைய பெற்றோர்கள்தான் இதற்கு முக்கிய காரணம்.
எனவே எனது கணவர் குடும்பத்தின் கொடுமைகளிலிருந்து என்னைக் காக்க வேண்டும். குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் எனது கணவர், மாமியார், மாமனார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ.1 லட்சம் வழங்கவேண்டும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ. 5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஆஸ்திரேலியாவிலிருந்து ராமையா ஆஜராகும்படி நீதிபதி உத்திரவிட்டார்.
இதன்படி நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான ராமையா, மனைவி மூலம் தான் பல கொடுமைகள் அனுபவித்து வருவதாக கூறினார்.
இந்த வழக்கின் மூலம் தனது மனைவி தன்னை மனரீதியாக தொந்தரவு கொடுப்பதாகவும், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறினார்.
நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு தான் கட்டுபடுவதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
விசாரணை தொடர்ந்து வருகிறது.