வேணும்னா சட்டைக் கல்லூரி அமைக்கலாம்..!
சென்னை:ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சட்டக் கல்லூரி அமைப்பது இயலாத காரியம். வேண்டுமானால் சட்டைக் கல்லூரி அமைக்கலாம் என பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் கூறியதால் அவை சிரிப்பலையில் மூழ்கியது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது வேலூர் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், காஞ்சிபுரம் பாமக உறுப்பினர் சக்தி கமலாம்பாள் ஆகியோர் தங்களது தொகுதிகளில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரினர்.
அதற்குப் பதில் அளித்த சட்டத்துறை அமைச்சருமான துரைமுருகன், ஏற்கனவே சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு ஆகிய ஆறு இடங்களில் சட்டக் கல்லூரிகள் உள்ளன. எல்லாப் பகுதிகளிலும் சட்டக் கல்லூரிகளை அமைக்க முடியாது என்றார்.
அப்போது முதல்வர் கருணாநிதி குறுக்கிட்டு துரைமுருகனை அழைத்து காதில் ஏதோ கிசுகிசுத்தார்.
தொடர்ந்து துரைமுருகன் பேசுகையில், வேண்டுமானால் முதல்வர் சொல்வதைப் போல சட்டைக் கல்லூரிகளை அமைக்கலாம் என்று அவர் கூறியபோது சிரிப்பலை எழுந்தது.