வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க மறு வாய்ப்பு
சென்னை:வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாக வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில்,
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் 3 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். கடந்த 2006ம் ஆண்டு புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆணை வெளியிடப்பட்டு, அன்றிலிருந்து 3 மாதங்களுக்குள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆன, 60 வயது கடந்தவர்களுக்கும், நோயினால் பாதிக்கப்பட்டு வேலை செய்ய இயலாதவர்களுக்கான மாத ஓய்வுதிய தொகை மாதம் ரூ.300 லிருந்து ரூ.400 ஆக உயர்த்தப்படுகிறது. இதே போல் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கும் ரூ.400 ஆக உயர்த்தப்படுகிறது.
தொழிலாளர் நல வாரிய குழந்தைகள் காப்பகத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 முட்டைகள் வழங்கப்படும்.
சென்னை, மதுரை, கோவை, ஆகிய இடங்களில் மண்டல தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில் இயங்கி வருகின்றன.இதில் மதுரை மண்டலத்திலுள்ள 16 மாவட்டங்களைப் பிரித்து, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக ஒரு மண்டல தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.