பிரபாகரனை கைது செய்ய காங். கோரிக்கை
சென்னை:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகளாகியும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்து தமிழகத்திற்குக் கொண்டு வர தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கேட்டார்.
சட்டசபையில், நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஞானசேகரன் பேசுகையில், பூந்தமல்லி தடா நீதிமன்றம் பிரபாகரனை தலைமறைவுக் குற்றவாளியாக அறிவித்து 16 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனால் இன்னும் பிரபாகரனை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
பிரபாகரனுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டும் 16 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதை செயல்படுத்த தமிழக காவல்துறை இந்த காலகட்டங்களில் எடுத்த நடவடிக்கை என்ன?
சட்டம் செயலிழந்து கிடக்கிறது என்பதையே இது காட்டுகிறது. மத்திய அரசு உடனடியாக இன்டர்போல் உதவியுடன் பிரபாகரனை நாடு கடத்தி இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்கு அவரை உட்படுத்த வேண்டும்.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐயும் தூங்கிக் கொண்டிருக்கிறது. முற்றிலும் செயலிழந்து கிடக்கிறது.
முதல்வர் கருணாநிதி, பிரபாகரனுக்கு எதிராக நிலுவையில் உள்ள பிடிவாரண்ட்டை செயல்படுத்த முனைய வேண்டும்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் கடந்த 3 மாதங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது பல இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் அலுமினிய குண்டுகள், இரும்பு உருளைகள் மற்றும் டெட்டனேட்டர்கள், ஏ.கே.56 துப்பாக்கி, கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், மனித வெடிகுண்டு ஜாக்கெட் உள்ளிட்டவை பிடிபட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் தொடர்புடைய 17 சம்பவங்கள் நடந்துள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தை தங்களது தளமாக புலிகள் பயன்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
புலிகள் அமைப்புக்கு உதவும், ஆதரவு தரும் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மீது தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், தடை விதிக்க வேண்டும்.
புலிகள் அமைப்புக்கு ஆதரவு தருவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பிரயோகித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications