சென்னையில் எம்எல்ஏக்களுக்கு தனி காலனி?
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனி குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், பாமக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். அனைத்து உறுப்பினர்களும் இதுகுறித்து ஒருமித்து கோரிக்கை விடுத்தால் நிச்சயம் அது செய்யப்படும் என்று முதல்வர் கருணாநிதி அதற்குப் பதிலளித்தார்.
சட்டசபையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் எம்எல்ஏக்களுக்கு தனி காலனியை அரசு உருவாக்குமா என்று கேட்டார்.
அதற்குப் பதிலளிக்க எழுந்த வீட்டு வசதி துறை அமைச்சர் சுப.தங்கவேலன், நேரடியாகப் பதிலளிக்காமல் சுற்றி வளைத்துப் பேசினார். இதையடுத்து குறுக்கிட்ட ஞானசேகரன், நேரடி பதில் தருமாறு கோரினார்.
அதற்கு தங்கவேலன் இந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை. முதல்வர் அழைத்து கேட்டால் எப்போதும் அதை தருவதற்கு இந்த துறை தயாராக இருக்கிறது என்றார்.
அப்போது எழுந்த பா.ம.க தலைவர் ஜி.கே மணி, முதல்வரின் பொன்விழா ஆண்டில் எம்எல்ஏக்களுக்கு இப்படி ஒரு காலனியை ஏற்படுத்திக் கொடுத்தால் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றார்.
பின்னர் காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் பேசுகையில், 50 ஆண்டுகளாக மக்கள் சேவையாற்றி வரும் முதல்வர் எம்எல்ஏக்களின் இந்த கோரிக்கையை நிச்சயமாக ஏற்றுக் கொள்வார் என கூறினார்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், இந்த கோரிக்கை குறித்து எல்லா கட்சிகளின் எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டு தந்தால் கவனிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications