சர்வே: ஜெவுக்குப் பின் அதிமுக தலைவர்?ஓ.பி-36%, வைகோ%-21, சசி 6%
சென்னை:ஜெயலலிதாவுக்குப் பின் அதிமுகவுக்கு யார் தலைமை வகிக்க வேண்டும் என்ற கேள்விக்கு பன்னீர்செல்வம் என 36 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். வைகோ தான் அதிமுக தலைவராக வேண்டும் என 21 சதவீதம் பேரும், சசிகலாவுக்கு வெறும் 6 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சன் டிவியும், தினகரனும் இணைந்து ஏ.சி.நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் மெகா சர்வே நடத்தி வருகின்றன. இதில் பல சுவாரஸ்யமான கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
அதில் ஒன்று தான் ஜெயலலிதாவுக்குப் பின் அதிமுகவுக்கு யார் தலைமை வகிக்க வேண்டும் என்பது. இந்த கேள்விக்கு 36 சதவீதம் பேர் அடக்க ஒடுக்க ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை பரிந்துரைத்துள்ளனர்.
21 சதவீதம் பேர் அதிமுகவுக்கு தலைவராக வைகோவுக்கு முழு தகுதி உள்ளதாக கூறியுள்ளனர் (அப்போ மதிமுக). 18 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்குப் பின் தலைவராக அந்தக் கட்சியிலோ அல்லது கூட்டணிக் கட்சியிலோ ஒருத்தர் கூட கிடையாது என பதிலளித்துள்ளனர்.
13 சதவீதம் பேர் இந்தக் கேள்விக்கு கருத்து சொல்லவே தயாராக இல்லை. 6 சதவீதம் பேர் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கட்சியின் நம்பர் டூவும், ஜெயலலிதாவுக்கு எல்லாமுமான உடன் பிறவா அன்புத் தோழி-சகோதரி சசிகலாவுக்கு பொது மக்களிடம் கிடைத்துள்ள ஆதரவு வெறும் 6 சதவீதம் தான். கிட்டத்தட்ட செங்கோட்டையனை ஈக்குவல் செய்கிறார் சசி.
ஆனால், இவரால் முதல்வராக்கப்பட்ட மிஸ்டர் அமைதி ஓ.பன்னீருக்கு சசியை விட 6 மடங்கு ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது. சசிகலாவின் சமூகத்தவர் அதிகம் வசிக்கும் மதுரையில் அவருக்குக் கிடைத்துள்ள ஆதரவு வெறும் 2 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.