இந்தியாவின் முதல் சைவ விமானம்
டெல்லி:முற்றிலும் சைவ உணவுகளே பரிமாறப்படும் இந்தியாவின் முதல் விமான சேவை டெல்லி-சண்டிகர் இடையே தனது சேவையைத் தொடங்கியுள்ளது.
கர்கோவன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டது எம்.டி.எல்.ஆர். ஏர்லைன்ஸ் நிறுவனம். 70 மற்றும் 100 சீட்களைக் கொண்ட விமானத்தை இது இயக்குகிறது. இந்த விமானங்களை பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து லீஸுக்குப் பெற்றுள்ளது எம்.டி.எல்.ஆர் ஏர்லைன்ஸ்.
விமானக் கட்டணம் ரூ. 1000த்திலிருந்து தொடங்குகிறது. முதலில் டெல்லிக்கும்-சண்டிகருக்கும் இடையிலான சேவையைத் தொடங்கியுள்ள இந்த நிறுவனம், அடுத்த 20 நாட்களில் ராஞ்சி, கொல்கத்தாவுக்கும் சேவையைத் தொடங்குகிறது. அதன் பின்னர் மும்பை, சூரத், ஜெய்ப்பூர், பவநகர் ஆகிய ஊர்களுக்கும் விரிவுபடுத்தவுள்ளது.
இதுகுறித்து நிறுவன தலைவர் கோபால் கோயல் கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று முதல் நான்கு ஜெட் விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளோம். பிராந்திய விமான சேவையில் முதலிடத்தைப் பிடிப்பதே எங்களது லட்சியம்.
எங்களது விமானங்களில் முழுக்க முழுக்க சைவ உணவுகளே பரிமாறப்படும். மற்ற விமானங்களில் வசூலிப்பதை விட 12 சதவீதம் குறைந்த கட்டணத்தையே நாங்கள் வசூலிக்கிறோம்.
விமானங்கள் தவிர 27 சீட்கள் கொண்ட இரண்டு கஸான் எம்ஐ-172 ரக ஹெலிகாப்டர்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
சண்டிகரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்படவுள்ளதாம். இதுதவி டெல்லி, ஜெய்ப்பூரிலும் அலுவலகங்களைத் திறக்கவுள்ளனர். அடுத்த ஆண்டுக்குள் இந்த நிறுவனம் 12 விமானங்களை வைத்திருக்குமாம்.
ரூ. 40 கோடி முதலீட்டில் இந்த விமான சேவையைத் தொடங்கியுள்ளது எம்.டி.எல்.ஆர். கட்டுமானப் பிரிவு, வணிக வளாகங்கள், மல்டிப்ளக்ஸுகள், சொகுசு ஹோட்டல்கள் பிசினஸில் இந்த நிறுவனம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.