வருகிறது சன் ஏர்லைன்ஸ்-ஜெ. தகவல்
சென்னை:முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் 2 விமானங்களை வாங்கியுள்ளனர். விரைவில் சன் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனத்தை அவர்கள் தொடங்கவுள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதி எவ்வளவு பரம ஏழையாக இருந்தார் என்பதை மறைந்த கவியரசு கண்ணதாசன் தனது வனவாசம் என்ற வாழ்க்கை சரிதத்தில் பல இடங்களில் விரிவாக சொல்லியுள்ளார்.
ஆனால் கருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரக் குடும்பங்களின் வரிசையிலும், ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள்ளும், அரபு நாட்டு ஷேக்குகளுக்கே சவால் விடும் வகையில் பெரும் பணக்கார குடும்பமாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி 2 விமானங்கள் வாங்கவுள்ளதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் கோரி சன் டிவி குழுமம் சார்பில் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். இந்த விமானங்ளை வெளிநாட்டு விமானிகள் ஓட்டுவார்கள் என்றும் அதில் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்ணப்பத்தை மின்னல் வேகத்தில் பரிசீலித்த மத்திய அரசு, ஜனவரி 1ம் தேதி சன் டிவி குழுமத்தினர் 2 விமானங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளனர். ரூ. 236.94 கோடியில் இந்த 2 விமானங்களையும் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பரம ஏழையாக கண்ணதாசனின் நூலில் குறிப்பிடப்பட்ட கருணாநிதியின் குடும்பம் இன்று கோடிகளில் புரளுகிறது என்பதற்கு இதை விட வேறு அத்தாட்சி தேவையில்லை.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி நடைபெற வேண்டும் என்று அடிக்கடி முதல்வர் கருணாநிதி கூறி வருவதன் நோக்கம் ஆகாய விமானங்களை வாங்குவதற்காகத்தான். கோடிகளைக் கொட்டி கருணாநிதி குடும்பம் விமான விளையாட்டில் ஈடுபட்டுள்ளது.
2 விமானங்களோடு இது நிற்கவில்லை. மேலும் பல விமானங்கள் வரவுள்ளன. சன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் விரைவில் பிறக்கும், அதன் விமானங்கள் வானில் பறக்கும். ஏழைகள் கஷ்டம் தீர்ந்த விடும், வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஏழைக் குழந்தைகள் சன் ஏர்லைன்ஸ் விமானத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம்.
கருணாநிதியின் குடும்பம் தரையில் இருக்கும் குடும்பம் அல்ல, ஆகாயத்தில் பறக்கும் குடும்பம். அவர்களது சொத்துக்களை ஆகாயத்தில்தான் கணக்கிட வேண்டும். அவர்களுக்கு வானமும் எல்லை இல்லை. வானம் மட்டும் வசப்படாது. அண்டசராசரங்களும், நட்சத்திரக் கூட்டமும், கருணாநிதி குடும்பத்துக்கு வசப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications