மனைவி, குழந்தை கழுத்தறுத்து கொலை;நாதஸ்வர வித்வான் தற்கொலை!
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மனைவி, குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு நாதஸ்வர வித்வானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கோவிந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (40). நாதஸ்வர வித்வான். இவருக்கு உஷா (28) என்ற மனைவியும், ரோகித் (8), லவன் குமார் (6) என்ற இரு மகன்களும் உள்ளனர்.
மனைவியின் நடத்தை குறித்து நடராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் மனம் வெறுத்த உஷா 4 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவரது இரு மகன்களையும் தூத்துக்குடியில் உள்ள நடராஜனின் அண்ணன் செல்லத்துரை தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் விட்டார்.
மனைவி இறந்ததற்குப் பின்னர் மணியாச்சி அருகே உள்ள சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த கீதா என்ற பெண்ணுடன் நடராஜனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அவரை கல்யாணமும் செய்து கொண்டார். அவர்களுக்கு காவ்யா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடராஜன் மஸ்கட் சென்று வேலை பார்த்தார். நான்கு மாதங்களுக்கு முன்புதான் திரும்பி வந்தார். அவரிடம் ஊரில் உள்ள சிலர், மனைவி கீதாவின் நடத்தை சரியில்லை என்று கூறியுள்ளனர். இனால் குழப்பமடைந்த அவர் மனைவியிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரவில் மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றார். போகும் வழியில் ஒரு முள்காட்டுப் பகுதியில் வைத்து மனைவியை அரிவாளால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பின்னர் காவ்யாவையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.
பின்னர் தனது வீட்டுக்கு திரும்பினார். அங்கு வைத்திருந்த விஷத்தை எடுத்துக் குடித்தார். பின்னர் அருகில் உள்ள தோப்புக்குச் சென்று படுத்துக் கொண்டார். அங்கேயே பிணமானார்.
காலையில் தோப்பின் உரிமையாளர் நடராஜன் பிணத்தைப் பார்த்து விட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து மூன்று பேரின் பிணங்களையும் மீட்டனர்.












Click it and Unblock the Notifications