தமிழகத்துக்கு அதிக டார்ச்சர் கொடுப்பதுநம்பர் 1 கர்நாடகம், நம்பர் 2 கேரளா!
சென்னை:தமிழகத்துக்கு அதிக தொல்லை கொடுப்பது கர்நாடக மாநிலம்தான் என தினகரன் நாளிதழ் எடுத்த சர்வேயில் தெரிய வந்துள்ளது. இம்சையில் இரண்டாவது இடம் கேரளாவுக்கும், 3வது இடம் ஆந்திராவுக்கும் கிடைத்துள்ளது.
தினகரன், ஏசி நீல்சன் நிறுவனம் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி வருகிறது. இதில் தமிழகத்துக்கு அதிக தொல்லை தரும் அண்டை மாநிலம் எது என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் சுவாரஸ்யமான முடிவுகள் தெரிய வந்துள்ளன.
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகமும், அதன் மக்களும் நடந்து கொள்ளும் விதம், கர்நாடகத்தை பெரிய வில்லனாக மக்களிடம் எடுத்துக் காட்டியிருபப்பதாக இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 84 சதவீதம் பேர் கர்நாடகம்தான் அதிக தொல்லை தருவதாக கூறியுள்ளனர். இவர்களில் சென்னையில் மட்டும் 94 சதவீதம் பேர் கர்நாடகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் 89 சதவீதம் பேரும், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 71 சதவீதம் பேரும் கர்நாடகாவை தமிழகத்தின் நம்பர் ஒன் எதிரி என்று கூறியுள்ளனர்.
கர்நாடகத்தை ஏன் அதிக தொல்லை தரும் மாநிலமாக கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு 91 சதவீதம் பேர் காவிரிப் பிரச்சினையைத்தான் காரணம் காட்டியுள்ளனர்.
காவிரிப் பிரச்சினையில் தொடர்ந்து கர்நாடகம் தமிழகத்திற்கு எதிராக நடந்து வருவதும் கர்நாடகம் மீதான கோபத்தை வெளிக்காட்டியுள்ளது.
தமிழகத்துக்கு அதிக தொல்லை தரும் மாநிலமாக கேரளாவுக்கு 9 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதில் சென்னையில் யாரும் கேரளாவைக் குறை கூற வில்லை. வேலூர் மாவட்டத்தில் 15 சதவீதம் பேரும், கோவையில் 10, மதுரையில் 13, நாகர்கோவிலில் 15 சதவீதம் பேர் கேரளாவுக்கு எதிராக உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை விஷயம் தொடர்பாகத்தான் கேரளாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். பெண்கள் மத்தியில்தான் (53சதவீதம் பேர்) கேரளாவுக்கு எதிரான கருத்து காணப்படுகிறது.
ஆந்திராவுக்கு எதிரான அலை மிகவும் குறைவாகவே உள்ளது. 5 சதவீதம் பேரே ஆந்திராவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications