விடைத்தாள் நகல்கள்- நாளை முதல் பெறலாம்: மறு கூட்டல்- 5 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை:பிளஸ் டூ விடைத்தாள் நகல்களை நாளை முதல் மாணவ-மாணவிகளின் பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் வருகிற 25ம் தேதிக்குள் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் வழங்கப்படும்.
மேல்நிலை பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய படங்களின் விடைத்தாள் நகல்கள் கேட்டு விண்ணப்பிக்கத் தேவையான விண்ணப்பங்கள்
நாளை முதல் 18ம் தேதி வரை அரசுத் தேர்வுகள் இயக்குனர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், அரசுத்தேர்வு மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும்.
அனுமதிக்கப்பட்ட ஆறு பாடங்களுக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் ஒரு பாடத்திற்கு ரூ. 275.
கட்டணத் தொகையை தேசியமாக்கப்பட்ட ஏதேனுமொரு வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் அரசுத்தேர்வு இயக்குனர் சென்னை 6 என்ற பெயரில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையை நேரில் ஒப்படைத்து விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
மறுமதிப்பீடு செய்ய விரும்புகிறவர்கள் அல்லது மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்போர் 5 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மறுமதிப்பீடு கட்டணம் ஒரு பாடத்திற்கு ரூ. 505. மறுகூட்டலுக்கு கட்டணம் (உயிரியல், தமிழ், ஆங்கிலம்) ரூ.305 மற்ற பாடங்களுக்கு ரூ. 205.
தேர்வெழுதிய அனைத்து பாடங்களுக்கும் மறுகூட்டல் செய்யகோரும் விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டல அலுவலகங்கள், தலைமை அலுவலகம் ஆகிய இடங்ளில் கிடைக்கும்.
இதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் 18ம் தேதி வரை வழங்கப்படும்.
மார்ச் 2007 தேர்வு எழுதியவர்களில் மூன்று அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வியுற்றிருந்தால் ஜூன், ஜூலை 2007ல் நடைபெறவுள்ள சிற்பு துணைத்தேர்வு எழுதலாம். இதற்கான விண்ணப்பங்கள் வருகிற 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை வழங்கப்படும்.
பள்ளி மாணவராகத் தேர்வு எழுதியவர்கள் அவரவர் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வு எழுதியவர்கள் தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பங்களை பெற்ற பள்ளி அலுவலகங்களிலேயே நேரில் ஒப்படைக்க வேண்டும்.
மார்ச் 2007 மேல்நிலைத்தேர்வு எழுதாமல் முந்தைய பருவங்களில் தேர்வெழுதி தோல்வியுற்ற தனித்தேர்வு எழுதியவர்கள் ஜூன், ஜூலை 2007 சிறப்புத் துணைத் தேர்வு எழுத விரும்பினால் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்கள், அரசுத்தேர்வுகள் இயக்குநர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்படிவம் பெற்று பூத்திய செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்ப வேண்டும்.
சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 25ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை நடைபெறும்.