எம்.எல்.ஏக்களுக்கு சூட்கேஸ், வாட்ச்!
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன நிறைவு பெற்றது. முதல்வரின் சட்டசபை பொன்விழாவையடுத்து எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் படம் பொறித்த கைக்கடிகாரம், சூட்கேஸ் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
நேற்று மாலை 3.17 மணிக்கு பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்தது. இதையடுத்து சட்டசபை நடவடிக்கைகைளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை முன்னவர் அன்பழகன் முன்மொழிந்தார். அது குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார்.
இதற்கிடையே, முதல்வரின் சட்டசபை பொன்விழாவையொட்டி அனைத்து உறுப்பினர்களுக்கும் முதல்வர் படம் பொறித்த கைக்கடிகாரம், ஒரு சூட்கேஸ் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அவற்றை உறுப்பினர்கள் சந்தோஷத்துடன் பெற்றுச் சென்றனர்.
பாமக உறுப்பினர்கள் தங்களது சைக்கிளில் சூட்கேஸை வைக்க முடியாமல், ஒரு கையில் சூட்கேஸையும், இன்னொரு கையில், ஹேண்டில் பாரையும் பிடித்தபடி பேலன்ஸ் செய்தவாறு எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்குச் சென்றனர். பாமகவினர் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சைக்கிளில்தான் சட்டசபைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் கூட்டத் தொடரில் தினசரி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 87 பேர். அதிக கேள்விகள் கேட்டவர் காங்கிரஸ் உறுப்பினர் கோவை தங்கம். மொத்தம் 4210 வினாக்களை அவர் கேட்டுள்ளார்.
அதிமுகவின் குணசேகரன் 3772, ஜெயக்குமார் 1992, பாமகவின் தமிழரசு 1451, ஆறுமுகம் 1364 கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதிக வினாக்களுக்குப் பதில் அளித்தவர் ஆற்காடு வீராசாமி. 19 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களில் அதிக நேரம் பேசியவர் மு.க.ஸ்டாலின். அவர் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைக்கு 1 மணி 50 நிமிடங்கள் பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications