ராமர் பாலம் இருப்பதை நிரூபித்தால் ராஜினாமா-பாலு
மதுரை:ராமேஸ்வரம்-இலங்கை இடையே மனிதர்களால் கட்டப்பட்ட பாலம் உண்மை என நாஸா விண்வெளி ஆய்வு மையம் நிரூபித்தால் என பதவியை ராஜினாமா செய்ய தயார் என மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
மதுரை வந்த மத்திய அமைச்சர் பாலு, மதுரை- திருச்சி 4 வழி சாலை பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சேது சமுத்திர திட்டம் நடைபெறும் இடத்தில் மணல் குன்றுகள் மட்டுமே உள்ளன. புவியியல்ரீதியில் சொன்னால் இதற்கு தம்போலோஸ் என்று பெயர். நிலவியல் மாற்றங்களால் இயற்கையாக உருவான மணல் குன்றுகள் இவை.
இதுவரை ேசது திட்டத்தில் 15 லட்சம் கியூபிக் மீட்டர் அளவிற்கு அகழ்வுப் பணி முடிவடைந்துள்ளது. எதிர்ப்பு மற்றும் போராட்டங்களினால் சேது சமுத்திர திட்டம் தடைபடாது. 2008 ஆண்டுக்குள் இத்திட்டம் முடிக்கப்பட்டு விடும்.
உமா பாரதி மத்திய கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது உத்தரவின் பேரில் ஆடம் பாலம் (ராமர் பாலம்) குறித்து புவியியல் ஆய்வு துறையால் ஆய்வு செய்யப்பட்டது. அதற்காக ஆடம் பாலத்தை 200 மீட்டர் ஆழத்துக்கு வெட்டி சோதனையிட்டனர்.
அப்போது இந்தப் பாலம் நில மாற்றங்களால், இயற்கையாக உருவாகி 7 லட்சம் ஆண்டுகள் ஆவது தெரியவந்தது.
ஆனால் இராமயணத்தில் ராமன் 17 லட்சம் ஆண்டுக்கு முன் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது ராமர் எவ்வாறு அந்த பாலத்தை கட்டியிருக்க முடியும் என பாலு கேள்வி எழுப்பினார்.
மதசார்பற்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயல்களில் ஈடுபடாது என்றார்.