இளம் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை
சென்னை:சென்னையில் இளம் பெண் ஒருவர் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டு மிகக் கொடூரமாக கொல்லப்பட்டார்.
சென்னை அயனாவரம், புது ஆவடி சாலையில், வேலங்காடு பகுதியில் சுடுகாடு உள்ளது. இங்கு புதச் செடிகள் அதிகம் நிறைந்திருக்கும். இந்த பகுதியில், 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு வீசப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீஸுகுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை மட்டும் அங்கு இல்லை. மாறாக, கை, கால்கள், உடல் பகுதி தனித் தனியாக பிளாஸ்டிக் பையில் போட்டு வீசப்பட்டிருந்தது.
காதல் அல்லது கள்ளக்காதல், குடும்ப பிரச்சனை காரணமாக இப்பெண் கொல்லப்பட்டிருக்கலாம், வேறு இடத்தில் கொன்று, உடலை வெட்டி இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் மோப்ப நாய் உடலை மோப்பம் பிடிக்காமல் ஓடியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ராகிங் கொடுமையில் சிக்கி மாணவர் நாவரசு இப்படித்தான் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டு அவரது உடல் வீசப்பட்டது. இப்போது அதே போல ஒரு பெண்ணைக் கொன்று துண்டு துண்டாக உடலை போட்டுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.