மும்பை: தமிழர்களின் தாராவி மாறுகிறது-குடிசைகளுக்குப் பதில் அடுக்கு மாடி வீடுகள்
மும்பை:தமிழர்கள் அதிகம் வசிக்கும், ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியாக வர்ணிக்கப்படும் மும்பையின் தாராவி பகுதியில் உள்ள குடிசைகளை அகற்றி விட்டு அங்கு வசிப்பவர்களுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டித் தர மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
மும்பை மாநகரின் மையப் பகுதியில் உள்ள இடம்தான் தாராவி. முழுக்க முழுக்க குடிசைகள் நிரம்பிய தாராவியில், கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியாக இது கருதப்படுகிறது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். அவர்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
மும்பை மாநகரம் பெரும் வளர்ச்சியைக் கண்டு இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக விளங்கி வந்தபோதிலும், தாராவி பகுதி மட்டும் ஆதி காலத்திலிருந்து அப்படியேதான் இருந்து வருகிறது.
தாராவி பகுதியை சீரமைக்க பல திட்டங்களைப் போட்டும் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் தாராவி பகுதியை முற்றிலும் சீரமைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. உடனடியாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி 223 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள தாராவியில், குடிசை வீடுகள் அனைத்தும் அகற்றப்பட்டு அடுக்கு மாடி வீடுகள் கட்டித் தரப்படும். ஒவ்வொரு வீடும் 225 சதுர அடியில் இருக்கும். படிப்படியாக இந்த வீடு கட்டும் திட்டம் அமல்படுத்தப்படும்.
தற்போது குடிசையில் வசிப்பவர்கள் இந்த வீடுகளில் குடியமர்த்தப்படுவர். தாரவியில் வீடுகள் மட்டுமல்லாமல் ஏராளமான தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் உள்ளன. அவற்றுக்கும் புதிய திட்டத்தின் கீழ் இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் தாராவி முற்றிலும் நவீனமான பகுதியாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.