கருணாநிதி-ஜெ. ரகசிய கூட்டு: விஜயகாந்த்
சென்னை:ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக திமுகவுக்கவும், அதிமுகவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநிலங்களவைத் தேர்தல் போட்டியில்லாமல் நடைபெற வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறி வருவது புதிராக உள்ளது. போட்டியிருந்தால் கட்சி மாறி ஓட்டு போட நேரிடும், குதிரை பேரம் நடக்கும், அதற்கு இடம் தரக் கூடாது என்று கருணாநிதி கூறுவது வியப்பாக உள்ளது.
கட்சி மாறி ஓட்டு போடப்பட்டால், தனது குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், தோற்கடித்து விடுவார்கள் என பயப்படுகிறாரா அல்லது தனது குடும்பத்தைச் சேர்ந்தவர் வெற்றி பெற முடியாமல் போய் விடும் என்று பயப்படுகிறாரா.
சட்டசபையில் அதிமுகவுக்கும், மதிமுகவுக்கும் சேர்த்து 66 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஒரு எம்.பி வெற்றி பெற 33.29 வாக்குகள் தேவை. இரண்டு பேர் வெற்றி பெற 67 வாக்குகள் தேவை. எனவே அதிமுகவின் 2வது வேட்பாளர் வெற்றி பெற தேமுதிகவின் வாக்கு கட்டாயம் தேவை.
அதிமுகவுக்கு தேமுதிகவின் ஆதரவே கிடைத்தே ஆக வேண்டிய சூழ்நிலை. ஆனால் அதற்கு வழியில்லை. இந்த நிலையில் தானாக முன்வந்து அதிமுகவுக்கு திமுக ஆதரவு கொடுக்க வேண்டியதன் ரகசியம் என்ன.
அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு கிடைத்து விடக் கூடாது என்ற காரணத்தாலா அல்லது தனது ஓட்டை ஜெயலலிதாவுக்குத் தந்து திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பொது எதிரியாக தேமுதிகவை மாற்ற கருணாநிதி நினைக்கிறாரா.
அதிமுக இரண்டு இடங்களில் வெற்றி பெறட்டும் என்று கருணாநிதியே சொல்லியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும் ஜெயலலிதா, இதுதான் நியாயமான தேர்தல், இப்படித்தான் நடக்க வேண்டும், முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது என்று பாராட்டுகிறார்.
இதிலிருந்ேத இரு கட்சிகளும் தங்களது பொது எதிரியாக தேமுதிகவைக் கருதுகின்றன என்பது தெரியும்.
கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் நடத்திய அராஜகம் நாடறியும். சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலையே ஜெயலலிதா புறக்கணித்தார். ஆனால் இவர்களுக்கு ஆதாயம் என்றால் சேர்ந்து கொள்வார்கள், இல்லாவிட்டால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வார்கள், ஊரைக் கூட்டி ஒப்பாரி வைப்பார்கள்.
எதிரும் புதிருமாக சண்டையிட்டு நாடகமாடுவார்கள். தமிழக மக்களை ஏமாற்றுகிற அரசியல் நாடகம் நடத்துவார்கள். மக்களை ஏமாற்ற இவர்கள் கையாளுகிற வித்தைகளே இவை.
இன்றைக்கு குதிரை பேரம் நடக்கும் என்று கவலைப்படும் கருணாநிதி, அன்று உள்ளாட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் மாபெரும் குதிரை பேரம் நடந்ததே அதற்கு என்ன சொல்கிறார்.
உளுத்துப் போன இந்த அரசியல்வாதிகளிடமிருந்து தமிழகத்தை மீட்டு புதிய அரசியலை தருவதே தேமுதிகவின் தலையாய கடமை என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications