தகாத வார்த்தை பேசும் தலைவர்கள்:சரத்
சென்னை:தமிழகத்தி்ல யார் குடிகாரர் என்று தினசரி நடக்கும் விவாதம் வேதனை தருவதாக உள்ளது என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்த்தை குடிகாரர், குடித்து விட்டு சட்டசபைக்கு வருகிறார் என்று ஜெயலலிதா கூறியிரு்நதார். அதற்குப் பதில் அளித்த விஜயகாந்த், ஜெயலலிதா ஊற்றிக் கொடுத்தாரா என்று பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில்,முதல்வர் கருணாநிதி தன்னைக் குடிகாரி என்று பொருள் பட எழுதியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார் ஜெயலலிதா. இவை தனக்கு வேதனை தருவதாக நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரத்குமார் அங்கு பேசுகையில்,தமிழகத்தில் யார் குடிகாரர் என்ற விவாதம் நடந்து வருகிறது. இது வேதனை தருகிறது. அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகின்றனர்.
எம்.ஜி.ஆர். 65 வயதிலும் இளமைப் பொலிவுடன் இருந்தார். சுறுசுறுப்பாக பணியாற்றினார். அவரைப் பார்த்துத்தான் நான் பொது சேவைக்கு வர விரும்பினேன். நான் அரசியலுக்கு வர விரும்பியதற்கு முக்கியக் காரணம் மக்கள் சேவை செய்யத்தான். ஒரு நாள் முதல்வராக இருந்து எதையும் சாதிக்க முடியாது.
எனக்கோ அல்லது என்னைச் சார்ந்தவர்களுக்கோ முதல்வர் பதவி மீது ஆசை இல்லை. அது எனது இலக்கும் இல்லை. மக்கள் முதல்வராக வேண்டும். அந்தப் பதவிக்கு அவர்களால் உயர முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்தப் போகிறேன்.
மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதே எனது கட்சியின் நோக்காக இருக்கும். தேர்தலில் 50 சதவீதம் பேரே வாக்களிக்கிறார்கள். அதில் 28 சதவீத வாக்குகளைப் பெறுபவர்கள் ஆட்சியைப் பிடிக்கிறார்கள். இது சரியல்ல. மற்றவர்களையும் வாக்களிக்கச் செய்தால் மட்டுமே ஜனநாயகம் மலரும் என்றார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications