குடும்ப அரசியல் காக்கும் கருணாநிதி-வைகோ
திருவாரூர்:கருணாநிதி தன் குடும்ப அரசியலை காக்க மூன்று பேரை பலி கொடுத்துள்ளார் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருவாரூர் அருகே முத்துப்பேட்டையில் பெரியார் சிலையை திறந்து வைத்து அவர் பேசுகையில்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பண்பற்ற முறையில் பேசியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. வேதாரண்யம் பகுதியில் அதிமுகவினரை திமுகவினர் கடுமையாக தாக்கினர்.
ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் சட்டம் ஒழுங்கை மீறியிருந்தால் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். அதை விட்டு தாக்குதல் நடத்தியது எந்த விதத்தில் நியாயம்.
திருவாரூரை தலைநகரமாக கொண்டு ஆண்டு வந்த மன்னன் மனுநீதி சோழன், ஐந்தறிவு கொண்ட பசு தனது கன்றை இழந்ததற்காக ஆறறிவு கொண்ட தன் மகனை தேர்க்காலில் இட்டு நீதி வழங்கினான்.
இவ்வாறான நாட்டில், கருணாநிதி தன் குடும்ப அரசியலை காக்க 3 பேரை பலி கொடுத்து (தினகரன் ஊழியர்களை அழகிரி ஆதரவாளர்கள் எரித்து கொன்றது) சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிறார்.
இந்த மதுரை சம்பவத்திற்கு பின் டெல்லி சென்ற கருணாநிதியிடம் விமான நிலையத்தில் நிருபர்கள் அழகிரி தொடர்பாக கேள்வி கேட்டபோது, சிபிஐ விசாரணை நடக்கிறது என்று கூறுவதை விட்டுவிட்டு, கொலை செய்ததை நீ பார்த்தாயா, நீதான்டா கொலைகாரன் என ஆத்திரத்தோடு அனுபவம் வாய்ந்த கருணாநிதி கூறியுள்ளார். அதை அந்த நிருபரும் திரும்ப கூறியிருந்தால் கருணாநிதியின் நிலை என்ன.
போலீஸ் துணையுடன் உருட்டுக் கட்டையால் திமுகவினர் தாக்கினர். இதை போல் அதிமுகவினர் திருப்பி தாக்க எத்தனை நேரமாகும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என திமுகவின் தோழமை கட்சியான கம்யூனிஸ்ட் கூறிவருகிறது.
திமுக ஆட்சியில் தமிழர்கள் உரிமைகள் இழக்கப்படுகிறது. மக்கள் மன்றத்தில் செல்வாக்கு சரிந்து வருகிறது.
இந்தியாவின் நிலையை மாற்ற அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா தலைமையில் ஜூன் 18ம் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. இது தேசியத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் எதிரொலிக்கும். விரைவில் அரசியல் மாற்றம் நிகழும் என்றறார் வைகோ.












Click it and Unblock the Notifications