தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி சந்தேகம்
சென்னை:தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சம்புகன் மட்டும்தான் தவறு செய்யக் கூடாது என்று கருதும் ராமனின் நடவடிக்கை போல இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. ஆணையம் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது
நேற்று நடந்த கூட்டத்தில் குடியரசு தலைவராக ஒரு பெண்மணியை தேர்வு செய்தோம். அப்போது நான் சோனியாவிடம் இந்த அறிவிப்பும், இந்த வெற்றியும் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆரம்பமாக இருக்கட்டும் என்றேன். அதை அவரும் ஏற்றுக் கொண்டு வெற்றி நமதே என தமிழில் முழுக்கமிட்டார்.
மகளிர் இடஒதுக்கீடு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்படுவதற்கு இது ஒரு ஆரம்பமாக இருக்கும்.
ஜனாதிபதி துணை தலைவர் பற்றி பேசினீர்களா?
துணைக்கு அப்புறம் வருவோம். இந்த வேட்பாளர் நியமனத்தை மகளிர் எந்த அளவிற்கு ஆதரித்து வரவேற்கின்றனர் என்பதை எடுத்துக்காட்ட ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் ஜூலை முதல் தேதி மகளிர் ஊர்வலம், கூட்டங்கள், மகளிரே கலந்து கொள்ளும் வகையில் நடத்த வேண்டும் என அறிவித்தேன்.
அனைத்து கட்சி மகளிரும் கலந்துக் கொள்ளும் வகையில் இந்த பேரணி சென்னையில் ஜூலை 1ம் தேதி நடக்கும். மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், மகளிர் வேட்பாளருக்கு போட்டியின்றி அனைத்துக் கட்சிகளும் விட்டுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் பேரணி அமையும்.
பிரதீபா பாட்டீலுக்கு பாஜகவின் ஆதரவு கோருவதில் மிகவும் தாமதம் ஏற்பட்டுவிட்டதாக வாஜ்பாய் கூறியிருக்கிறாரே?
அழைப்பு விடுத்து ஆதரவு கேட்கும் நாகரீகத்தை நாங்கள் கடைப்பிடித்தோம். தாமதமான அழைப்பு என்பது சரியான காரணமாகவோ, சாக்கு போக்காகவோ இருந்தாலும் எதுவும் சொல்வதாக இல்லை.
3 வது அணி சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டால்?
நீங்கள் கேள்விப்பட்டீர்களா?
பெண் என்பதால் பிரதீபாவுக்கு ஜெயலலிதா ஆதரவு தருவாரா?
எல்லாமே நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.
திமுகவிற்கு மத்திய அமைச்சரவையில் மேலும் ஒரு இடம் கிடைக்குமா?
கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.
திமுகவிற்கு குடியரசு துணைத் தலைவர் பதவி ஒதுக்கப்படுமா?
குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு அது பற்றி பேசலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
4 தொகுதிகளில் மனுத் தாக்கல் செய்து சட்டத்தை மீறிய ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடரப்படுமா?
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க தவறாது என்று நம்புகிறோம். ஆனால் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சம்புகன் மட்டும்தான் தவறு செய்யக் கூடாது என்று கருதும் ராமன் நடவடிக்கை போல இருக்கிறதா என சந்தேகம் எழுகிறது. சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கும் நிச்சயம் உண்டு.
எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது கொடநாடு பற்றி பேசலாமா என ஜெயலலிதா கூறுவது குறித்து?
நீங்கள் புரிந்து கொண்டால் சரி.
மதுரை மேற்கு தொகுதி பிரச்சாரத்திற்கு எப்போது செல்கிறீர்கள்?
அங்கு 23ம் தேதி பிரச்சாரம் செய்வேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications