கிரகலட்சுமி ஏற்கனவேகல்யாணமானவர்- பிரஷாந்த் குண்டு
சென்னை:என் மனைவி கிரகலட்சுமிக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டது. அதை என்னிடம் சொல்லாமல் என்னை ஏமாற்றி கட்டி வைத்து விட்டனர் என்று நடிகர் பிரஷாந்த் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
சிவாஜி படத்தையும் மீறி ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரம் நேற்று திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்ததாக பிரஷாந்த் விவகாரமும் திரையுலகினரை உலுக்கி எடுத்துள்ளது.நடிகர் பிரஷாந்த்துக்கும், கிரகலட்சுமிக்கும் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்யாணம் நடந்தது. கர்ப்பிணியான கிரகலட்சுமி, குழந்தை பெறுவதற்காக தாய் வீட்டுக்குப் போன பின்னர் மீண்டும் கணவன் வீட்டுக்குத் திரும்பவில்லை. அன்று முதல் இருவரும் பிரிந்தே வசித்து வருகின்றனர்.
இந் நிலையில் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி முதலில் பிரஷாந்த், குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார். பின்னர் கிரகலட்சுமி பதில் மனு தாக்கல் செய்தார். பிறகு பிரஷாந்த் குடும்பத்தினர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களைக் கூறினார்.
இந்த நிலையில் அதிரடியாக காவல்துறை ஆணையரை சந்தித்து பிரஷாந்த் குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் கொடுத்தார். இதன் பேரில் பிரஷாந்த் குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார் பிரஷாந்த்.
செய்தியாளர்களைச் சந்தித்த பிரஷாந்த் கூறுகையில், எனக்கும், கிரகலட்சுமிக்கும் இடையே கல்யாணம் ஆன பிறகு அவரது நடவடிக்கைகளில் பெரும் மாற்றங்கள் தெரிந்தன. எங்களுக்குள் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டன.
குழந்தைப் பேறுக்காக தாய் வீட்டுக்குப் போன அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவர் மீது நான் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
இந்த நிலையில் கடந்த 12ம் தேதி எனக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், உங்களுடைய மனைவிக்கு ஏற்கனவே பதிவுத் திருமணம் நடந்து விட்டது என்று கூறினார். இதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். முதலில் நான் இதை நம்பவில்லை. ஆனால் பின்னர் விசாரிக்கத் தொடங்கினேன்.
அதில் உண்மை தெரிய வந்து அதிர்ச்சியுற்றேன். கடந்த 1998ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி சென்னை அண்ணா சாலை பூபேகம் தெருவைச் சேர்ந்த நாராயணன் வேணு பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வி.எம். மண்டபத்தில், அவர்களது திருமணம் நடந்துள்ளது.
ஒரு மாதம் கழித்து டிசம்பர் 12ம் தேதி திருமணத்தை பதிவு செய்துள்ளனர். பதிவுச் சான்றிதழுக்கான நகல் என்னிடம் உள்ளது.
ஏற்கனவே திருமணம் ஆன கிரகலட்சுமியை, பணம் பறிப்பதற்காக எனக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். இது எனக்கு இப்போதுதான் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வடபழனி துணை ஆணையர் பாஸ்கரிடம் புகார் கொடுத்துள்ளேன். கிரகலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளேன்.
கிரகலட்சுமிக்குப் பிறந்த குழந்தை எனது குழந்தைதான். அதற்கு நான்தான் தந்தை.
வருகிற 18ம் தேதி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு வருகிறது. அப்போது இதுகுறித்து தெரிவிப்பேன். குழந்தை குறித்து கோர்ட்டே முடிவு செய்யட்டும் என்றார் பிரஷாந்த்.
பிரஷாந்த்தின் இந்தப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரஷாந்த் கூறுவது அபாண்டம், கிரகலட்சுமி பெயரைக் கெடுக்கப் பார்க்கிறார் என்று கிரகலட்சுமியின் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரஷாந்த் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications