பண மோசடி: ஏமாந்த இளைஞர்கள்காவல் நிலையம் முன்பு தற்கொலை முயற்சி
சீர்காழி:வெளிநாட்டு வேலையில் சேர பணம் கொடுத்து ஏஜென்ட்டால் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் கொடுக்க வந்த தங்களை போலீஸார் உதாசீனப்படுத்தியதால் வேதனை அடைந்த நான்கு விவசாய தொழிலாளர்கள் காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செந்தில், ராமச்சந்திரன், நாகராஜன். மற்றும் சீர்காழி அருகே உள்ள தேனூரைச் சேர்ந்தவர் சங்கர். நான்கு பேரும் தங்களது ஊரில் விவசாயம் பார்த்து வந்தனர்.
விவசாயம் செய்ய போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் வேலையின்றி வாடி வந்த நால்வரையும், மங்கை மடம் என்ற ஊரைச் சேர்ந்த ஜலீல் ரகுமான் என்பவர் அணுகினார்.
வெளிநாட்டில் உங்களுக்கு நல்ல வேலை உள்ளது. பணம் கொஞ்சம் செலவாகும், ஆனால் வேலை கியாரண்டி என்று கூறியுள்ளார். இதை நம்பிய அவர்கள், பஞ்சமூர்த்தி என்பவரின் மகன் கலையரசன் மூலம் மொத்தம் ரூ. 3.5 லட்சம் பணம் கொடுத்துள்ளனர்.
ஒரே மாதத்தில் உங்களை அனுப்பி வைக்கிறேன் என்று கூறிய ரகுமான் அதன்படி செய்யாமல் நான்கு பேரையும் ஏமாற்றி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான்கு விவசாயிகள் மற்றும் கலையரசன் ஆகியோர் ரகுமானிடம் போய்க் கேட்டபோது அவர் சரிவர பதில் சொல்லவில்லை.
மேலும் ஆட்களை வைத்து ஐந்து பேரையும் மிரட்டியுள்ளார். இதையடுத்து திருவெண்காடு காவல் நிலையத்தில் ஐந்து பேரும் புகார் கொடுத்தனர். ஆனால் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து டிஎஸ்பி மலைச்சாமியிடம் புகார் கொடுக்கச் சென்றனர். ஆனால் அவரோ புகாரை வாங்க மறுத்து விட்டார். இதனால் வேதனை அடைந்து ஐந்து பேரும் சீர்காழி காவல் நிலையத்திற்கு வந்தனர். காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்துத் தற்கொலை செய்ய முயன்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஐந்து பேரையும் போலீஸார் கைது செய்தனர். நிலைமை இப்படி இருக்க ஜலீல் ரகுமான், விஷம் குடித்ததாக கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
அவர் உண்மையிலேயே விஷம் சாப்பிட்டாரா அல்லது நடிக்கிறாரா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications